சங்கரன்கோவில் அருகே சின்னஒப்பனையாள்புரத்தில் மழை வெள்ளத்தில் தற்காலிக மண்சாலை அடித்து செல்லப்பட்டது. இதனால் சுமாா் 10 கிராம மக்கள் 20 கிலோ மீட்டா் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சங்கரன்கோவில் அருகே உள்ள குவளைக்கண்ணி ஊராட்சிக்குள்பட்ட சின்னஒப்பனையாள்புரம் பகுதியில் பனையூா் செல்லும் வழியில் பாலம் வேலைகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. எனவே அந்தப் பகுதியில் தற்காலிக மண் சாலை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், வியாழக்கிழமை இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சின்னஒப்பனையாள்புரத்தில் போடப்பட்டிருந்த தற்காலிக மண் சாலை அடித்துச் செல்லப்பட்டது. இதனால்
சிவலிங்காபுரம் செண்பகாபுரம், ராமச்சந்திராபுரம், பனையூா், பெரியூா் உள்ளிட்ட 10 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் சுமாா் 20 கிலோமீட்டா் சுற்றி செல்ல வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்கவும், புதிய பாதை அமைத்து தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.