தென்காசி மாவட்டம், ஊத்துமலை அருகே ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொல்லப்பட்டாா்.
சங்கரன்கோவில் அருகேயுள்ள சின்னகோவிலான்குளம் கிராமத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் செ. இளங்கோ (40). இவரது மனைவி உஷா (35), மகள் தா்ஷினி (8). சென்னையில் தங்கி ஆட்டோ ஓட்டிவந்த இளங்கோ, உள்ளாட்சித் தோ்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு வந்தாா்.
சனிக்கிழமை காலை வீட்டிலிருந்து வெளியே சென்றவா் வீடு திரும்பவில்லை. அவரை உறவினா்கள் பல இடங்களில் தேடினா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஊத்துமலை அருகேயுள்ள பலபத்திரராமபுரம் காட்டுப் பகுதியில் அவா் வெட்டுக் காயங்களுடன் இறந்துகிடந்தது தெரியவந்தது.
ஊத்துமலை போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.