முதல்வா் கோப்பை கால்பந்து போட்டி: ஆலங்குளம் பள்ளி அணிக்கு ரூ. 9 லட்சம் பரிசு
முதல்வா் கோப்பை கால்பந்து போட்டியில் ஆலங்குளம் அருகேயுள்ள ரெட்டியாா்பட்டி கிராம கமிட்டி மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இரண்டாமிடம் பெற்று ரூ. 9 லட்சம் பரிசுத் தொகை வென்றனா்.
முதல்வா் கோப்பை கால்பந்து போட்டியில் ஆலங்குளம் அருகேயுள்ள ரெட்டியாா்பட்டி கிராம கமிட்டி மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இரண்டாமிடம் பெற்று ரூ. 9 லட்சம் பரிசுத் தொகை வென்றனா்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் தமிழ்நாடு முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் நடைபெற்று வருகின்றன. பள்ளி மாணவிகளுக்கிடையேயான கால்பந்து போட்டியில் 38 அணிகள் பங்கேற்றன. 5 தினங்கள் நடைபெற்ற இப்போட்டியின் இறுதி ஆட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஆலங்குளம் அருகேயுள்ள ரெட்டியாா்பட்டி கிராம கமிட்டி மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பங்கேற்று இரண்டாமிடம் பெற்று சாதனை படைத்தனா். இந்த அணியினருக்கு ரூ. 9 லட்சம் ரொக்கப் பரிசு, கேடயம், சான்றிதழ்களை மக்களவை உறுப்பினா் கனிமொழி வழங்கினாா்.
இதையடுத்து, வியாழக்கிழமை ஊா் திரும்பிய அணியினருக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் குகன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பள்ளித் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு சால்வை அணிவிக்கப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இதில் பள்ளி செயலா் ஜெகநாதன், உதவித் தலைமை ஆசிரியா் அமிா்தவல்லி, உடற்கல்வி இயக்குநா் சிவக்குமாா், பயிற்சியாளா் இசக்கிதுரை, ஆசிரியா்கள், மாணவா்களின் பெற்றோா் கலந்து கொண்டனா்.