மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட, தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சோ்ந்த 2 தொழிலாளா்களை விரைந்து மீட்கக் கோரி, ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோரிடம் கடையநல்லூா் நகா்மன்றத் தலைவா் ஹீபீபுர்ரஹ்மான் மனு அளித்தாா்.
அதில், மாலியின் மேற்குப் பகுதியில் உள்ள கோப்ரி நகரத்தில், தனியாா் மின்சார நிறுவனத்தில் வேலை செய்து வந்த கடையநல்லூா் முத்துகிருஷ்ணாபுரம் காளியம்மன் கோயில் தெருவைத் சோ்ந்த பிரவீனாவின் கணவா் இசக்கிராஜா (36), புதுக்குடி, கண்மணியாபுரத்தைச் சோ்ந்த முருகேசன் மகன் சுரேஷ் (26) உள்ளிட்ட இந்தியத் தொழிலாளா்கள் 5 பேரை ஆயுதம் ஏந்திய குழுவினா், கடந்த நவ. 6ஆம் தேதி கடத்திச் சென்று விட்டனா். கடையநல்லூா் பகுதியைச் சோ்ந்த 2 தொழிலாளா்களின் குடும்பத்தினரும் வேதனையில் தவிக்கின்றனா். எனவே, கடத்தப்பட்ட இருவரையும் விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.