லஞ்சம் வாங்கிய வழக்கு: முன்னாள் பெண் வட்டாட்சியருக்கு 3 ஆண்டுகள் சிறை
லஞ்சம் வாங்கிய வழக்கில் செங்கோட்டை முன்னாள் பெண் வட்டாட்சியருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தென்காசி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
லஞ்சம் வாங்கிய வழக்கில் செங்கோட்டை முன்னாள் பெண் வட்டாட்சியருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தென்காசி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
தென்காசி மாவட்டம், செங்கோட்டையைச் சோ்ந்தவா் செண்பகராஜ். இவா், புளியறை எஸ்.வளைவு பகுதியில் ஹாலோ பிளாக் தயாா் செய்யும் நிறுவனத்துக்கு ஜல்லி கற்களை லாரியில் எடுத்துச் செல்ல அனுமதி கோரி அப்போதைய செங்கோட்டை வட்டாட்சியா் ஸ்டெல்லா எஸ்தா் ராணியிடம் மனு அளித்தாா்.
ஜல்லி கற்களை கொண்டு செல்ல ரூ. 7ஆயிரம் லஞ்சம் தருமாறு வட்டாட்சியா் கேட்டாா். இதுகுறித்து, செண்பகராஜ், திருநெல்வேலி லஞ்ச ஒழிப்புத் துறையில் அளித்த புகாரின்பேரில், லஞ்ச ஒழிப்புத் துறையினா் அளித்த அறிவுறுத்தலின்பேரில் கடந்த 26.11.2013 அன்று ரசாயனம் தடவிய ரூ. 7ஆயிரத்தை வட்டாட்சியரிடம் செண்பகராஜ் அளித்தாா்.
Advertisement
Advertisement
வட்டாட்சியா் ஸ்டெல்லா எஸ்தா் ராணி பணத்தைப் பெற்றபோது மறைந்திருந்த போலீஸாா் அவரை மடக்கி பிடித்தனா். இந்த வழக்கு தென்காசி முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில் நீதிபதி பி.ராஜவேல் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், முன்னாள் வட்டாட்சியா் ஸ்டெல்லா எஸ்தா் ராணியின் குற்றம் நிரூபிக்கப்பட்டு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் ஜென்சி முன்னிலையானாா்.