எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: பெல் மைதானத்தில் ஆட்சியர் ஆய்வு
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறவுள்ள பெல் மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறவுள்ள பெல் மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
இது தொடர்பாக செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ஞாயிற்றுக்கிழமை (நவ.12) பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. அதற்காக மேடை அமைக்கும் பணிகள், பயனாளிகளை அமர வைக்க ஒதுக்கப்பட்டுள்ள இடம், பொதுமக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடம், முக்கிய பிரமுகர்களுக்கான இடம், அரங்கு அமைக்கும் இடம் என அனைத்துப் பகுதிகளையும் பார்வையிட்ட ஆட்சியர், தொடர்ந்து எம்ஜிஆர் நூற்றாண்டு புகைப்படக் கண்காட்சி வைக்கப்படும் இடம், அரசுத் துறை அரங்குகள் அமைக்கப்படும் இடம் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தார்.
விழாவிற்கு வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஆட்சியர், மாநகர காவல் துணை ஆணையர் சுகுணா சிங் ஆகியோர், அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினர்.பொதுப் பணித்துறை அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் அரங்கு அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.
அப்போது பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் பாஸ்கரன், மாநகர நகர் நல அலுவலர் பொற்செல்வன் உள்ளிட்டோர் உடனிருந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.