முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் ஜூலை 11இல் டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் தொடக்கம்: முதல் ஆட்டத்தில் திண்டுக்கல்- திருச்சி மோதல்

மூன்றாவது சீசன் சங்கர் சிமென்ட் - தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி-20 கிரிக்கெட் தொடர், திருநெல்வேலியில் புதன்கிழமை (ஜூலை 11) தொடங்குகிறது.

Updated On : 9 ஜூலை, 2018 at 7:36 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

மூன்றாவது சீசன் சங்கர் சிமென்ட் - தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி-20 கிரிக்கெட் தொடர், திருநெல்வேலியில் புதன்கிழமை (ஜூலை 11) தொடங்குகிறது.  முதல்ஆட்டத்தில் திண்டுக்கல்- திருச்சி அணிகள் மோதுகின்றன.
இது தொடர்பாக டிஎன்பிஎல் தலைமைச் செயலதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க ஊடக மேலாளர் ஆர்.என்.பாபா ஆகியோர் திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
எட்டு அணிகள் பங்கேற்கும் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் மொத்தம் 32 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் இறுதி ஆட்டம் உள்பட 4 ஆட்டங்கள் சென்னையில் நடைபெறுகின்றன. திருநெல்வேலி, திண்டுக்கல்லில் தலா 14 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. 
திருநெல்வேலியில் சங்கர் நகர் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன மைதானத்திலும், திண்டுக்கல்லில் நத்தம் என்பிஆர் கல்லூரி மைதானத்திலும், சென்னையில் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்திலும் போட்டி நடைபெறுகிறது. 
இத்தொடரில் காரைக்குடி, மதுரை, தூத்துக்குடி அணிகளை புதிய உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர். அதனால் அந்த அணிகளின் பெயரிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த அணிகள் முறையே ஐட்ரீம் காரைக்குடி காளை, சீசெம் மதுரை பாந்தர்ஸ், ஜோன்ஸ் டூட்டி பேட்ரியாட்ஸ் என்ற பெயரில் களம் காணுகின்றன. இதுதவிர, வி.பி.திருவள்ளூர் அணியின் பெயர், வி.பி.காஞ்சி வீரன்ஸ் என மாற்றப்பட்டுள்ளது. 
தினந்தோறும் இரவு 7.15 மணிக்கு ஆட்டம் தொடங்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் இரு ஆட்டங்கள் நடைபெறுவதால், பிற்பகல் 3.15 மணிக்கு ஓர் ஆட்டமும், இரவு 7.15 மணிக்கு மற்றொரு ஆட்டமும் தொடங்கும். 
ரூ.1 கோடி பரிசு: இந்த சீசனில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.1 கோடியும், இரண்டாவது இடம்பிடிக்கும் அணிக்கு ரூ.60 லட்சமும், 3 மற்றும் 4-ஆவது இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.40 லட்சமும், எஞ்சிய 4 இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.25 லட்சமும் ரொக்கப் பரிசாக வழங்கப்படும்.
இத்தொடரின் அனைத்து ஆட்டங்களும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.
 


"தமிழக வீரர்களுக்கு நல்ல வாய்ப்பு'
இதனிடையே, இந்திய கிரிக்கெட் வீரரும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டனுமான அஸ்வின், திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் தமிழக வீரர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாகும். இங்கு கிடைத்த அடித்தளத்தால்தான் சிலர், ஐபிஎல் போட்டியிலும், இந்திய அணியிலும் விளையாட வாய்ப்பு பெற்றுள்ளனர். உதாரணமாக வாஷிங்டன் சுந்தர்,  டிஎன்பிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடியதால் ஐபிஎல் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார்.  தற்போது இந்திய அணிக்காக ஆடி வருகிறார்.  டிஎன்பிஎல் போட்டியால் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இப்போது தமிழக அணிக்கு பெருநகரங்களைச் சேர்ந்த வீரர்களைவிட,  பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்களே அதிகம் தேர்வாகின்றனர் என்றார்.


டிக்கெட் விற்பனை
டிஎன்பிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை திங்கள்கிழமை தொடங்குகிறது. சங்கர் பள்ளியில் உள்ள கவுன்ட்டரில் காலை 9.15 மணி முதல் டிக்கெட் விற்பனை செய்யப்படவுள்ளது. இதேபோல் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் டிக்கெட் விற்பனை செய்யப்படும். டிக்கெட் விலை ரூ.50 ஆகும்.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.