நெல்லையில் அதிகாரிகள் வாகனச் சோதனை: ஆம்னி பேருந்து பறிமுதல்; ரூ.1.8 லட்சம் அபராதம்
திருநெல்வேலியில் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய சோதனையில், விதிகளை மீறி வாகனங்களை ஓட்டியதாக, ஓட்டுநர்களிடம் ரூ. 1 லட்சத்து 80 ஆயிரத்து 250 வரி மற்றும் அபராதம்
திருநெல்வேலியில் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய சோதனையில், விதிகளை மீறி வாகனங்களை ஓட்டியதாக, ஓட்டுநர்களிடம் ரூ. 1 லட்சத்து 80 ஆயிரத்து 250 வரி மற்றும் அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும், விதிகளை மீறி இயக்கப்பட்டதாக ஆம்னி பேருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக திருநெல்வேலி வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் வந்தன. அதன்பேரில், கங்கைகொண்டான் மற்றும் கயத்தாறு நான்கு வழிச்சாலைகளில் திருநெல்வேலி வட்டார துணை போக்குவரத்து ஆணையர் அலுவலக செயலாக்கப் பிரிவு ஆய்வாளர்கள் சந்திரசேகர், பத்மபிரியா, இணை போக்குவரத்து அலுவலக ஆய்வாளர் ஸ்ரீரங்கம், செயலாக்கப் பிரிவு ஆய்வாளர் விநாயகம் ஆகியோர் அடங்கிய குழுவினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக சென்ற ஆம்னி பேருந்து, லாரி, கார், வேன், ஆட்டோ போன்ற வாகனங்களை வழிமறித்து சோதனை நடத்தினர். அதில், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாதது, அதிக பாரம் ஏற்றி வந்தது, அனுமதிச் சீட்டு இல்லாமல் கட்டணம் வசூலித்தது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதையடுத்து போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்பட்டதாக வாகனங்களின் உரிமையாளர்களிடம் இருந்து வரி மற்றும் அபராத தொகையாக ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்து 250 ரூபாய் வசூலிக்கப்பட்டது. மேலும், அனுமதிச் சீட்டு இல்லாமல் இயக்கி வரி ஏய்ப்பு செய்ததாக ஆம்னி பேருந்து ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.