தினமணி செய்தி எதிரொலியாக திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான கட்டணக் கழிப்பறைகளில் மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர். முறையாகப் பராமரிக்கப்படாத 2 கழிப்பறைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் மக்கள் கூடும் இடங்களில் கழிப்பறைகள் பற்றாக்குறை நிலையில் உள்ளன. இதுதவிர புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், ரயில் நிலையம் அருகேயுள்ள கட்டணக் கழிப்பறைகளில் போதிய பராமரிப்பின்மை காரணமாக அவதிப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து தினமணியில் செய்தி வெளியிடப்பட்டது.
இந்நிலையில், திருநெல்வேலி மாநகர நல அலுவலர் சதீஷ்குமார் உத்தரவின்பேரில், மாநகராட்சி அலுவலர்கள் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கட்டணக் கழிப்பறைகளில் ஆய்வு செய்தனர். அப்போது முறையாக பராமரிக்கப்படாத 2 கழிப்பறைகளுக்கு தலா ரூ.500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல புதிய பேருந்து நிலைய வளாகத்திற்குள் சுற்றித் திரிந்த 4 மாடுகள் பிடிக்கப்பட்டு கோசாலையில் விடப்பட்டன.
தச்சநல்லூர் மண்டலத்தில் பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் தெருநாய்களைக் கட்டுப்படுத்தும் வகையில் 18 நாய்கள் செவ்வாய்க்கிழமை பிடிக்கப்பட்டன. அவை அனைத்திற்கும் திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உதவியுடன் கருத்தடை சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.