சங்கரன்கோவிலில் அனுமதியின்றி எடுக்கப்பட்ட தனியார் கேபிள் இணைப்பை அதிகாரிகள் வியாழக்கிழமை துண்டித்ததனர்.
சங்கரன்கோவிலில் திருவேங்கடம் செல்லும் சாலைப் பகுதியில் செல்லும் தனியார் செல்லிடப்பேசி நிறுவன தரை வழி கேபிள் இணைப்பை, மற்றொரு தனியார் நிறுவனம் அனுமதியின்றி கடந்த ஓராண்டாக பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த தகவல் அறிந்த அரசு கேபிள் வட்டாட்சியர் முகம்மதுபுகாரி, வட்டாட்சியர் ஆதிநாராயணன், நகராட்சி ஆணையர் முகைதீன்அப்துல்காதர், சங்கரன்கோவில், திருவேங்கடம் அரசு கேபிள் டிஜிட்டல் வினியோகஸ்தர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் முன்னிலையில் சம்பந்தப்பட்ட இடம் தோண்டப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதில், சுமார் 2 அடி ஆழத்தில் ஏற்கனவே பதிக்கப்பட்டிருந்த தனியார் செல்லிடப்பேசி நிறுவன யூ.ஜி. கேபிளில் புதிய தனியார் நிறுவன கேபிள் இணைக்கப்பட்டு சமிக்ஞை பெறப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த இணைப்பை அதிகாரிகள் துண்டித்தனர். பின்னர் அதை அரசு கேபிளுடன் இணைத்து சமிக்ஞை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது.