திருநெல்வேலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பரவலாக பலத்த மழை பெய்தது. சாலைகளில் தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை ஓரளவு பெய்தாலும், திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் மலையடிவாரப் பகுதிகளில் மட்டுமே பெய்தது. திருநெல்வேலி, சங்கரன்கோவில், மானூர், பாளையங்கோட்டை உள்ளிட்ட வட்டங்களில் மழை பெய்யவில்லை. குறிப்பாக, திருநெல்வேலி மாநகரில் கடந்த ஒரு மாதமாக மழையில்லாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது. பாளையங்கால்வாய் பாசனப் பகுதிகளில் கார் பருவ சாகுபடியும் பொய்த்துப் போனது.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக பகலில் கடுமையான வெயில் நிலவி வந்தது. அதனால் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யுமா என்ற ஏக்கத்தில் மக்கள் இருந்து வந்தனர். ஞாயிற்றுக்கிழமை காலையிலும் திருநெல்வேலியில் வெயிலின் தாக்கம் அதிகமிருந்தது. பிற்பகலில் கருமேகங்கள் சூழ்ந்து மாலை 3 மணிக்கு பிறகு பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. மாநகரில் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. திருநெல்வேலி கல்லூர், சுத்தமல்லி, பேட்டை, அபிஷேகப்பட்டி, மானூர், கோபாலசமுத்திரம், முன்னீர்பள்ளம், சேரன்மகாதேவி, வீரவநல்லூர், ஆலங்குளம் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
திருநெல்வேலி சந்திப்பு, முருகன்குறிச்சி, திருநெல்வேலி நகரம் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் முன்விளக்குகளை எரியவிட்டபடி மிகவும் மெதுவாகவே நகர்ந்து சென்றன. திருநெல்வேலி சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம், சிந்துபூந்துறை பகுதிகளில் முறையாக வடிகால் ஓடைகள் சீரமைக்கப்படாததால் மழைநீர் அதிகளவில் தேங்கி வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.