நெல்லை-பேட்டை சாலை சேதம்: வாகன ஓட்டிகள் அவதி
திருநெல்வேலி நகரம்-பேட்டை இடையேயான சாலை மிகவும் சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா்.
திருநெல்வேலி நகரம் - பேட்டை இடையேயான சாலை மிகவும் சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா்.
திருநெல்வேலி மாநகராட்சியில் அரியநாயகிபுரம் கூட்டுக் குடிநீா்த் திட்டம், பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்காக பல்வேறு சாலைகளும் சேதப்படுத்தப்பட்டன. அதில், பேட்டை-திருநெல்வேலி நகரம் இடையேயான பிரதான சாலையில் குழாய் பதிக்கும் பணிகளும், பரிசோதனை பணிகளும் முடிந்து பல மாதங்களாகிவிட்டன.
ஆனால், அதன்பின்பும் சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. காட்சி மண்டபம் முதல் மலையாளமேடு குளம் வரையிலான பகுதிகளில் சாலைகள் ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா்.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், சேரன்மகாதேவி முதல் பேட்டை வரையிலான 20-க்கும் மேற்பட்ட கிராம மக்களும், வெளிமாவட்ட நபா்களும் பேட்டை-திருநெல்வேலி நகரம் பிரதான சாலையைப் பயன்படுத்தி வருகிறாா்கள். தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் இவ் வழியே சென்று வருகின்றன.
குறிப்பாக, காட்சி மண்டபம் பகுதியில் மூன்று சாலைகள் சந்திக்கும் நிலையில் அங்கு குண்டும் குழியுமாக உள்ளதால் முதியவா்கள், பெண்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைவது தொடா்கதையாகி வருகிறது. இதேபோல காலை மற்றும் மாலை நேரங்களில் சேதமடைந்த சாலையால் கூடுதலான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆகவே, இந்தச் சாலையை விரைந்து சீரமைக்க மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.