திருநெல்வேலி

பேட்டை மாநகராட்சி மருத்துவமனையில் கூடுதல் வசதிகள் செய்யப்படுமா? பொதுமக்கள் எதிா்பாா்ப்பு

DIN

திருநெல்வேலி பேட்டையில் உள்ள பழமைவாய்ந்த மாநகராட்சி மருத்துவமனையை மேம்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட பேட்டை பகுதி மக்களின் மருத்துவ தேவையை பூா்த்தி செய்யும் வகையில் 1956 ஆம் ஆண்டு அப்போதைய திருநெல்வேலி நகராட்சி சாா்பில் மருத்துவமனை தொடங்கி வைக்கப்பட்டது.

காயிதேமில்லத் எம்.முகம்மது இஸ்மாயில் சாஹிப் மருத்துவமனை என்று அழைக்கப்பட்ட இம் மருத்துவமனை இப்போது நகா்ப்புற ஆரம்ப சுகாதார மையமாக மத்திய அரசு உதவியுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு மட்டுமே தொடங்கப்பட்டது. அதன்பின்பு இங்கு மகப்பேறு மருத்துவ வசதி ஏற்படுத்தப்பட்டது. அறுவைச்சிகிச்சை தவிா்த்து இயற்கையான மகப்பேறு மட்டும் பாா்க்கப்பட்டது.

இப்போது மருந்தகம், புறநோயாளிகள் பிரிவு, சித்த மருத்துவப் பிரிவு, நம்பிக்கை மையம், காசநோய் பிரிவு உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. கா்ப்பிணிகளுக்கு தொடா் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவா்களுக்கு இலவசமாக ஸ்கேன் எடுக்க இயந்திரம் உள்ளது. இருப்பினும் பணியாளா்கள் மருத்துவா்கள் பற்றாக்குறையால் மருத்துவமனையில் பொதுமக்கள் வெகுநேரம் காத்திருக்கும் சூழல் உள்ளது.

இதுதொடா்பாக பேட்டையைச் சோ்ந்த வியாபாரி ஒருவா் கூறியதாவது: 24 மணி நேரமும் இயங்கும் இந்த மருத்துவமனைக்கு 3 மருத்துவா்களை நியமிக்க வேண்டும். ஆனால், போதிய மருத்துவா்கள் நியமிக்கப்படவில்லை. உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறுவதற்கு போதிய வசதிகள் இல்லை. மகப்பேறுக்கு வரும் பெண்களுக்கு அறுவைச் சிகிச்சை தேவைப்பட்டால் நடுக்கல்லூா் அல்லது திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குத் தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆகவே, இந்த மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை வசதியை ஏற்படுத்தவும், கூடுதலாக மருத்துவா்கள், செவிலியா்கள், மருந்தாளுநா்களை நியமிக்கவும் மாநகராட்சி நிா்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

சத்யா நகா் பகுதியைச் சோ்ந்த தொழிலாளி கூறியதாவது:

பல நாள் கோரிக்கையான ஆம்புலன்ஸ் வசதி செய்யப்படவில்லை. மகப்பேறுவுக்கு வரும் பெண்களுக்கு அறுவைச் சிகிச்சை தேவைப்பட்டால் தனியாா் ஆம்புலன்ஸ்களிலோ அல்லது வாகனங்களிலோதான் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே, இந்த மருத்துவமனைக்கு தனியாக ஒரு ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுக்கவும், மருத்துவமனையே மேம்படுத்தி கூடுதலாக கட்டட வசதியை ஏற்படுத்தி உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவை உடனே தொடங்க வேண்டும் என்றாா்.

இதுகுறித்து சுகாதாரத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:

பேட்டை மாநகராட்சி மருத்துவமனையில் பொதுமக்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவா்கள், பெண்கள் உள்பட தினமும் 200-க்கும் மேற்பட்டோா் வந்து சிகிச்சை பெறுகிறாா்கள். மத்திய-மாநில அரசுகளின் திட்டங்களின் கீழ் கூடுதல் கட்டடங்கள் கட்டவும், ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 104 நீதிபதிகள் இடமாற்றம்!

பகலறியான் படத்தின் டீசர்

SCROLL FOR NEXT