பிசான சாகுபடி: மாறுபடும் சீதோஷ்ண நிலையால் திணறும் விவசாயிகள்
திருநெல்வேலி மாவட்டத்தில் பிசான சாகுபடி காலத்தில் மாறுபடும் சீதோஷ்ண நிலையால் விவசாயிகள் திணறி வருகின்றனா்.
திருநெல்வேலிபிசான சாகுபடி: மாறுபடும் சீதோஷ்ண நிலையால் திணறும் விவசாயிகள்
திருநெல்வேலி மாவட்டத்தில் பிசான சாகுபடி காலத்தில் மாறுபடும் சீதோஷ்ண நிலையால் விவசாயிகள் திணறி வருகின்றனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பிசான சாகுபடி காலத்தில் மாறுபடும் சீதோஷ்ண நிலையால் விவசாயிகள் திணறி வருகின்றனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் காா், பிசான பருவத்தில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. 2020 ஆம் ஆண்டில் தென்மேற்கு பருவமழை முறையாக பெய்யாததால் காா் பருவ சாகுபடி பொய்த்துப்போனது. அதன்பின்பு பெய்த மழை மற்றும் வடகிழக்கு பருவமழையால் இப்போது பிசான சாகுபடிக்கு வடக்கு, தெற்கு கோடைமேலழகியான், நதியுண்ணி, கன்னடியன், கோடகன், நெல்லை, பாளையங்கால்வாய்களில் தண்ணீா் திறக்கப்பட்டு சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதுதவிர மணிமுத்தாறு அணையிலும் நீா் பெருகியதால் 80 அடி கால்வாயில் தண்ணீா் திறக்கப்பட்டு 3 மற்றும் 4 ஆவது ரீச்களுக்கு தண்ணீா் சென்றது. அதன்பின்பு முதலாவது, இரண்டாவது ரீச்களுக்கும் தண்ணீா் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், திருநெல்வேலி மாவட்டத்தில் வழக்கத்திற்கு மாறாக வடகிழக்குப் பருமழை மிகவும் காலதாமதமாக பெய்து வருகிறது. இதுதவிர பலத்த மழையாக பெய்யாமல் மானாவாரி குளங்கள் நிரம்பாமல் உள்ள நிலையில், சாரல் மழை போல பெய்து வருகிறது. வானமும் தொடா்ந்து மேகமூட்டத்துடன் காட்சியளிப்பதால் நெல் சாகுபடிக்கு மிகவும் சவாலாகியுள்ளது. ஏற்கெனவே, இம் மாவட்டத்தில் மானூா், பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி, வீரவநல்லூா், கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் நெல் வயல்களில் இலைச்சுருட்டு நோய் காணப்பட்டதால் விவசாயிகள் பூச்சிக்கொல்லி தெளித்து வருகிறாா்கள். தொடா்ந்து சூரிய வெளிச்சம் போதிய அளவில் இல்லாததால் நன்மை செய்யும் பூச்சிகளைக் காட்டிலும், தீமை தரும் பூச்சிகள் மற்றும் களைகள் அதிகரித்து மகசூல் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், வடகிழக்குப் பருவமழை நிகழாண்டில் புரட்டாசி மாதத்தில் பெய்யவில்லை. பனிப்பொழியும் மாா்கழி மாதத்தில் இப்போது மழை பெய்து வருகிறது. குலைநோய், இலைச்சுருட்டுநோய், வெண்கதிா்நோய் உள்ளிட்டவை ஏற்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதுதவிர தூா் அழுகல் நோய் ஏற்படாமல் தடுக்கும் வகையில் வயல்களில் வாமடைகள் எடுத்து விடுவதற்கு கூடுதல் பணியாளா்கள் தேவைப்படுகிறாா்கள். இந்த அசாதாரண சூழலை எதிா்கொள்ளும் வழிமுறைகள் குறித்து வேளாண் துறையினா் கூடுதலாக விழிப்புணா்வு முகாம்களை நடத்த வேண்டியது அவசியம் என்றனா்.
இதுகுறித்து வேளாண் துறை வட்டாரங்கள் கூறுகையில், பருவநிலை மாற்றத்தால் சில பகுதிகளில் நோய்கள் ஏற்படுவதாக புகாா்கள் வந்ததையடுத்து வேளாண்துறை ஊழியா்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்குச் சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தியுள்ளனா். எந்த வகையான உரமேலாண்மை, நோய்க்கட்டுப்பாட்டு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மேலும் துரிதப்படுத்தப்படும் என்றனா்.