முகப்பு
திருநெல்வேலி

சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்: சித்த மருத்துவர்கள் கோரிக்கை

சித்த மருத்துவத்திற்கு தனியாக பல்கலைக் கழகம் அமைக்க வேண்டும் என்று சித்து மருத்துவர்கள் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
மைக்கேல் செயராசு.
பகிர்:

சித்த மருத்துவத்திற்கு தனியாக பல்கலைக் கழகம் அமைக்க வேண்டும் என்று சித்து மருத்துவர்கள் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து உலகத் தமிழ் மருத்துவக் கழக நிறுவனர் சித்த மருத்துவர் மைக்கேல் செயராசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,  தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு சித்த மருத்துவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழகம் தற்போது கரோனாத் தாக்குதலால் மிகவும் இக்கட்டான சூழலில் உள்ளது. 

இந்நிலையில் கரோனாத் தொற்றுக்கான மருத்துவத்தில் சித்த மருத்துவத்தை முதன்மையானதாக மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் உயிரிழப்பை பெருமளவு கட்டுப்படுத்தலாம். நியாய விலைக் கடைகள் மூலம் கபசுரக் குடிநீரை வழங்கி பொதுமக்கள் தொடர்ந்து கபசுரக் குடிநீரைப் பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும். கரோனாவுக்கான மருத்துவத்தில் சித்த மருத்துவத்திற்கும் பங்களிப்பு வழங்க வேண்டும்.

மேலும் புதிதாகப் பதவியேற்றுள்ள தமிழக அரசு சித்த மருத்துவர்களின் நீண்ட கால கோரிக்கைகளான கீழ்கண்ட 10 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். தமிழர்களின் தனிச்சிறப்பு வாய்ந்த சித்த மருத்துவத்தை தமிழனத்தின் தேசிய மருத்துவமாக அறிவிக்க வேண்டும், சித்த மருத்துவத்திற்கு தமிழகத்தில் தனியாகப் பல்கலைக் கழகம் அமைக்க வேண்டும்,

சித்த மருத்துவத்திற்கு தனித்துறை மற்றும் அமைச்சகம் அமைக்க வேண்டும், சித்த மருத்துவத்துறை முதன்மைச்செயலராக கண்டிப்பாக சித்த மருத்துவரையே நியமிக்க வேண்டும், அரசு உதவி மருத்துவ அலுவலர் பணியிடங்களில் 80 விழுக்காடு சித்த மருத்துவப் பட்டதாரிகளுக்கு ஒதுக்க வேண்டும், அரசு வேலை வாய்ப்பு இல்லாமல் தனியாக சித்த மருத்துவமனை மற்றும் சித்த மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் நடத்துபவர்களுக்கு ஈட்டுறுதி கேட்காமல் வங்கிக் கடன் வழங்க அரசு உறுதி செய்ய வேண்டும்,

சித்த மருத்துவப் பாடத்திட்ட நூற்களை மறுசீராய்வு செய்து புதிய பாட நூற்கள் தொகுக்க வேண்டும், அனைத்து மூலிகைகளையும் ஒரே இடத்தில் வணிக அளவில் வளர்த்து நேரடி விற்பனைக்கு வழங்கும் விதத்தில் ஒரு மிகப் பெரிய மூலிகைத் தோட்டம் அல்லது மூலிகைக்காடு உருவாக்க வேண்டும், 

சித்த மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு உரிய சான்றாதார நூல் பட்டியலை விரிவாக்கம் செய்து இந்திய ஒன்றிய அரசின் அரசாணை இதழில் வெளியிடுவதற்கு ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் மற்றும் சித்த மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் தங்கு தடையின்றி மான்கொம்பு, சந்தனம், கஞ்சா, அபின், இரசம் முதலான பாஷாணங்கள் பயன்படுத்துவதற்கு கண்காணிப்புடன் கூடிய சிறப்பு அனுமதி வழங்க வேண்டும், போலி சித்த மருத்துவ நிறுவனங்கள் மீது அரசு நேரடியாக தலையிட்டு சட்டபூர்வமாக தடை செய்வதற்கான நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.