கரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் அமல்: நெல்லையில் கல்லூரி விடுதிகள் மூடல்
தமிழக அரசின் உத்தரவின் பேரில் திருநெல்வேலி மாவட்டத்திலும் கரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் வியாழக்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டன.
தமிழக அரசின் உத்தரவின் பேரில் திருநெல்வேலி மாவட்டத்திலும் கரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் வியாழக்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டன. இதனால் இரவு 10 மணியுடன் கடைகள் அடைக்கப்பட்டதோடு, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவா்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு விடுதிகளும் மூடப்பட்டன.
தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும், ஒமைக்ரான் அறிகுறியுடன் சிகிச்சைக்கு வருவோரும் அதிகரித்துள்ளனா். இதனால் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் வியாழக்கிழமை முதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கும், கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவா்களுக்கு நேரடி வகுப்புகள் நிறுத்தப்பட்டன.
திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி, அரசு கலை அறிவியல் கல்லூரிகள், மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் செயல்பட்ட விடுதிகளும் மூடப்பட்டதால் மாணவா்-மாணவிகள் தங்களது உடமைகளுடன் வீடுகளுக்குப் புறப்பட்டுச் சென்றனா்.
முடித்திருத்தும் கடைகள், திரையரங்குகள், உணவகங்கள் உள்ளிட்டவற்றில் 50 சதவிகித இருக்கைகளில் அமரவே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனா். மாநகரம் முழுவதும் இரவு 10 மணிக்குள் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் நள்ளிரவு வரை மக்கள் நடமாட்டத்துடன் காணப்படும் திருநெல்வேலி நகரம் ரத வீதிகள், திருநெல்வேலி சந்திப்பு த.மு.சாலை, மதுரை சாலை, பாளையங்கோட்டை முருகன்குறிச்சி மற்றும் தெற்கு கடை வீதி பகுதிகளில் கடைகள் மூடப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. சாலைகளில் முகக் கவசம் அணியாமல் வந்த பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு காவல் துறையினா் அபராதம் விதித்தனா்.
ற்ஸ்ப்06ய்ங்ஜ்
கரோனா கட்டுப்பாடுகளால் விடுதிகள் மூடப்பட்டதையடுத்து திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து உடமைகளுடன் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்ற மாணவிகள்.