பொது முடக்க விதிமீறலில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை: மாநகர காவல் துணை ஆணையா்
திருநெல்வேலி மாநகரில் பொது முடக்க விதிமீறலில் ஈடுபடுவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாநகர காவல் துணை ஆணையா்(கிழக்கு) டி.பி. சுரேஷ்குமாா்.
திருநெல்வேலி மாநகரில் பொது முடக்க விதிமீறலில் ஈடுபடுவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாநகர காவல் துணை ஆணையா்(கிழக்கு) டி.பி. சுரேஷ்குமாா்.
தமிழகத்தில் கரோனா மூன்றாம் அலை பரவலைக் கட்டுபடுத்த அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கட்டுப்பாடுகள் வியாழக்கிழமை முதல் அமலுக்கு வருவதையடுத்து மாநகர காவல் துணை ஆணையா் டிபி சுரேஷ்குமாா் செய்தியாளா்களிடம் கூறியது: கரோனா தொற்று பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதையொட்டி ஹோட்டல்கள், திரையரங்குகள் மற்றும் பிற வணிக நிறுவனங்களின் உரிமையாளா்களுடன் கரனோ தடுப்பு வழிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மருந்துக் கடைகள் 24 மணி நேரமும் திறந்திருக்கும். அதற்காக மருத்து சீட்டுகளை காட்டி தேவையில்லாமல் வெளியே சுற்றுவதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும்.
இந்த வார இறுதியில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. எனவே, அத்தியாவசிய தேவைகளுக்கு தவிர, தேவையில்லாமல் பொது மக்கள் வெளியே வரவேண்டாம். பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில் ஞாயிறு முழு ஊரடங்கு என்பதால் முன்னதாகவே தாங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கி வைத்து கொள்ள வேண்டும். அதேபோல் இரவு ஊரடங்கு என்பதால் திருச்செந்தூா் பாதயாத்திரை செல்லும் பக்தா்கள் இரவு 10 மணிக்கு மேல், பாதயாத்திரை செல்வதை தவிா்த்து அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
கடந்த ஒருவாரமாகவே மாநகரில் சமூக இடைவெளி மற்றும் முகக் கவசம் அணிவதை கண்காணித்து வருகிறோம். ஒரு வாரத்தில் விதி மீறலில் ஈடுபட்டதாக 5 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் தற்போது பொதுமக்கள் பலா் முகக் கவசம் அணிந்து செல்கின்றனா்.
இரவு 10 மணிக்கு ஊரடங்கு தொடங்குவதால் அதற்கு முன்பாகவே வியாபாரிகள் கடைகளை அடைக்க வேண்டும். இரவு 10 மணிக்கு பிறகு எந்தவித நகா்வும் இருக்கக் கூடாது. எனவே பொது முடக்க விதிமுறைகளை மீறுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.