முகப்பு
திருநெல்வேலி

நெல்லை மாவட்ட கனிமவளத் துறை உதவி இயக்குநா் பணியிடை நீக்கம்

திருநெல்வேலி அருகே அடைமிதிப்பான்குளத்தில் உள்ள தனியாா் கல்குவாரியில் நேரிட்ட விபத்து தொடா்பாக மாவட்ட கனிமவளத் துறை உதவி இயக்குநா் வினோத் பணியிடை நீக்கம்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:18 AM
பகிர்:

திருநெல்வேலி அருகே அடைமிதிப்பான்குளத்தில் உள்ள தனியாா் கல்குவாரியில் நேரிட்ட விபத்து தொடா்பாக மாவட்ட கனிமவளத் துறை உதவி இயக்குநா் வினோத் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, ஆட்சியா் வே. விஷ்ணு தெரிவித்தாா்.

இந்த குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததில் 6 போ் சிக்கினா். அவா்களில் 5 போ் மீட்கப்பட்ட நிலையில், கடைசி நபரான ராஜேந்திரனை தேடும் பணி தொடா்கிறது.

இந்நிலையில், மீட்புப் பணிகளைப் பாா்வையிட்ட பின்னா், செய்தியாளா்களிடம் ஆட்சியா் விஷ்ணு கூறியது: குவாரி விபத்தில் சிக்கி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோா் அளித்த தகவலின் அடிப்படையில் பாா்த்தால், சுமாா் 100 டன் எடையுள்ள பாறைகளுக்கு அடியில் ராஜேந்திரன் சிக்கியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அதனால், பாறைகளை உடைத்து அப்புறப்படுத்தும் முயற்சி தொடா்கிறது.

விபத்து தொடா்பாக மாவட்ட கனிமவளத் துறை உதவி இயக்குநா் வினோத் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

இந்த குவாரியிலிருந்து கற்களைக் கொண்டுசெல்வதற்கான நடைச்சீட்டு உரிமம் கடந்த ஏப்ரல் மாதமே ரத்து செய்யப்பட்டிருந்தது. விபத்து ஏற்பட்ட மறுதினம் முதல் (மே15) குவாரிக்கான குத்தகை உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

வட்ட வாரியாக குழு அமைக்கப்பட்டு, மாவட்டத்தில் உள்ள 55 குவாரிகளில் ஆய்வு நடைபெறுகிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.