முகப்பு
திருநெல்வேலி

2024 மக்களவைத் தேர்தலில் நாடாளுமன்றத்தில் இருந்து பாஜக தூக்கி எறியப்படும்: தொல் திருமாவளவன் 

2024 மக்களவைத் தேர்தலில் நாடாளுமன்றத்தில் இருந்து பாஜக தூக்கி எறியப்படும் என்று தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.  

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:51 AM
பகிர்:

2024 மக்களவைத் தேர்தலில் நாடாளுமன்றத்தில் இருந்து பாஜக தூக்கி எறியப்படும் என்று தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 
பாளையங்கோட்டையில் உள்ள ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் அவருடைய சிலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நெல்லைச் சீமையில் நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தில் முக்கிய தளபதியாக களத்தில் நின்றவர் ஒண்டிவீரன். நீட் விலக்கு கிடப்பில் போட்டுள்ள ஆளுநரை கண்டித்தும் மத்திய அரசைக் கண்டித்தும் திமுக சார்பில் நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து அதில் பங்கேற்றுள்ளனர். 
திருநெல்வேலியில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் நான் பங்கேற்கிறேன். நீட் விலக்கு மசோதாவில் எந்த சூழலிலும் கையெழுத்திட மாட்டேன் என ஆளுநர் ஆர் என் ரவி பேசி வருகிறார். அவருடைய பேச்சை விடுதலை சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது. நாங்குநேரி மற்றும் கழுகுமலையில் மாணவர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக திருநெல்வேலியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. நாங்குநேரி சம்பவம் தொடர்பாக நீதிபதி சந்துரு தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. 
மட்டுமின்றி தமிழக முழுவதும் கல்வி நிறுவனங்களில் உள்ள ஜாதி, மத வெறுப்பு அரசியல் குறித்து விரிவான ஆய்வு அறிக்கை அளிக்க நீதிபதி சந்துரு தலைமையிலான விசாரணை ஆணையத்தை விரிவுபடுத்த வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 ஆகிய இரு தினங்கள் மும்பையில் இந்தியா கூட்டணி கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது. அதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நான் பங்கேற்கிறேன். இந்தியா கூட்டணி உருவான பிறகு மோடி உள்ளிட்ட பாஜகவினர் பதற்றத்துடன் இருக்கிறார்கள். நாடாளுமன்றத்திலும் வட மாநிலங்களிலும் திமுக மற்றும் அதன் தலைமை குறித்து பாஜகவினர் கடுமையாக சாடி பேசுகிறார்கள். 
இந்தியா கூட்டணியை உருவாக்க முன் முயற்சி எடுத்த திமுகவை பிரதமர் மோடியால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இந்தியா கூட்டணி பாஜகவுக்கு மிகப்பெரிய சவாலாக உருவாகி இருக்கிறது. 2024 மக்களவைத் தேர்தலில் நாடாளுமன்றத்தில் இருந்து பாஜக தூக்கி எறியப்படும். மணிப்பூர் சம்பவத்தில் உரிய விளக்கம் அளிக்காத பிரதமர் மோடி, மத அடிப்படையிலான பிளவு அரசியல் மூலம் மற்ற மாநிலங்களில் ஆதாயம் தேட பார்க்கிறார். பாஜகவின் முகத்தை மக்கள் அறிந்து வைத்துள்ளனர். 2024 மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மையான இந்து மக்களே பாஜகவை வீழ்த்துவார்கள்.  
நீட் தேர்வு தொடர்பான விவகாரத்தில் திமுக மீது அரசியல் காழ்ப் புணர்ச்சியோடு பாஜக அரசியல் செய்கிறது. எல்லா தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிமுக கூட வேண்டாம் என்று தான் சொல்கிறது. உண்மைக்கு மாறான தகவலை பரப்புவது பாஜகவின் வழக்கமான கலாச்சாரம், இதை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.