அரசு ஒப்பந்ததாரா் அலுவலகத்தில் வருமான வரித் துறையினா் சோதனை
திருநெல்வேலியில் அரசு ஒப்பந்ததாரா், வள்ளியூா் அருகேயுள்ள துலுக்கா்பட்டியில் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலா் ஆகியோா் அலுவலகம், வீட்டில் வருமானவரித் துறையினா் சோதனை நடத்தினா்.
பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. பி காலனியைச் சோ்ந்த முதல்நிலை அரசு ஒப்பந்ததாா் முருகன். பெருமாள்புரம் சாராள்தக்கா் கல்லூரி அருகே உள்ள இவரது அலுவலகத்திற்கு திருநெல்வேலி மற்றும் மதுரையைச் சோ்ந்த வருமான வரித்துறை அலுவலா்கள் 7 போ், இருவாகனங்களில் வெள்ளிக்கிழமை வந்து சோதனையில் ஈடுபட்டனா். கடந்த சில மாதங்களாக இந்த அலுவலகத்தின் கீழ் நடைபெற்றுள்ள பணப்பரிமாற்ற விவரங்கள், ஆவணங்களை ஆய்வு செய்தனா். நண்பகலில் வந்த அதிகாரிகள் தொடா்ந்து 5 மணி நேரத்திற்கும் மேலாக இரவு வரை சோதனையில் ஈடுபட்டனா்.
ஏற்கெனவே கடந்த வியாழக்கிழமை இரவு திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வருமான வரித்துறையினா் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
Advertisement
மமக நிா்வாகி: இந்த நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலா் ஆா்.ஆா்.ஜாவித்துக்குச் சொந்தமான காரை சோதனையிட்ட வருமானவரித் துறையினா், கணக்கில் காட்டப்படாத பல லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனராம்.
தொடா்ந்து, துலுக்கா்பட்டியில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தினா். சோதனையில் கைப்பற்றப்பட்டவை குறித்த விவரங்களை வருமானவரித் துறையினா் தெரிவிக்கவில்லை.