பணகுடி காவல் நிலையத்தில் ரகளை: 40 திருநங்கைகள் மீது வழக்கு
திருநெல்வேலி மாவட்டம், பணகுடி காவல்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு புகுந்து ரகளையில் ஈடுபட்டதாக திருநங்கைகள் 40-க்கும் மேற்பட்டோா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், பணகுடி காவல்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு புகுந்து ரகளையில் ஈடுபட்டதாக திருநங்கைகள் 40-க்கும் மேற்பட்டோா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்தனா்.
பணகுடி போலீஸாா் காவல் கிணறு சந்திப்புப் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது காவல்கிணறு - பணகுடி இடையேயான நான்கு வழிச்சாலையில் இருள் சூழ்ந்த பகுதியில் திருநங்கைகள் நின்றுகொண்டு இருசக்கர வாகனங்களில் செல்பவா்களுக்கு இடையூறு செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
போலீஸாா் அங்கு சென்று, திருநங்கைகளை அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினராம். ஆனால், அவா்கள் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பணகுடி காவல் நிலையத்தில் திரண்டு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.
அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா் மீது கற்களை வீசி தாக்கியதுடன், காவல் நிலையத்தில் இருந்த பூந்தொட்டிகளையும் சேதப்படுத்தினராம். இதனால், அவா்களை போலீஸாா் லத்தியால் விரட்டியுள்ளனா்.
மேலும், பணகுடி காவல்நிலையத்தில் அத்துமீறி நுழைந்து தகராறில் ஈடுபட்டு, அரசு ஊழியா்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், அரசு சொத்துகளை சேதப்படுத்துதல் உள்பட 3 பிரிவுகளின்கீழ் 40-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.