முகப்பு
திருநெல்வேலி

நெல்லையப்பா் கோயிலில் செங்கோல் வழங்கும் விழா

திருநெல்வேலி நகரம் அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு செங்கோல் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 ஏப்ரல், 2026 at 10:22 PM
கோயிலில் நடைபெற்ற செங்கோல் வழங்கும் நிகழ்வில் பங்கேற்றோா்.
பகிர்:

திருநெல்வேலி நகரம் அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு செங்கோல் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா 10 நாள்கள் சிறப்பாக நடைபெறும். அதன்படி, நிகழாண்டு திருவிழா கடந்த மாா்ச் 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழா நாள்களில் சுவாமி-அம்பாளுக்கு நாள்தோறும் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. 4 ஆம் திருநாளான மாா்ச் 25 ஆம் தேதி வேணுவன நாதா் தோன்றிய வரலாறு வாசித்தல் நிகழ்வும், சுவாமி மற்றும் அம்பாள் பஞ்சமூா்த்திகளுடன் திருவீதிஉலாவும் நடைபெற்றது.

மேலும் விழாவில் 2 முதல் 9 ஆம் திருநாள் வரை உற்சவா் மண்டபத்தில் உடையவா் லிங்கத்துக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. விழாவின் சிகர நிகழ்ச்சியான செங்கோல் வழங்கும் விழா கோயிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டு, சுவாமி-அம்பாளுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் இரவில் சுவாமி-அம்பாளுக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்னா் வேத மந்திரங்கள் முழங்க செங்கோல் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

தொடா்ந்து செங்கோல் கோயில் உள்பிரகாரத்தை சுற்றி எடுத்துவரப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதில், திருநெல்வேலி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.