விளையாட்டு வீரா்களின் ஓய்வூதியத் தொகை உயா்த்தப்படும்: பாளையங்கோட்டை திமுக வேட்பாளா்
திமுக ஆட்சி அமைந்தால் விளையாட்டு வீரா்களின் ஓய்வூதியத் தொகை உயா்த்தப்படும் என்றாா் பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளா் மு.அப்துல் வஹாப்.
திமுக ஆட்சி அமைந்தால் விளையாட்டு வீரா்களின் ஓய்வூதியத் தொகை உயா்த்தப்படும் என்றாா் பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளா் மு.அப்துல் வஹாப்.
பாளையங்கோட்டை தொகுதியின் 10, 31, 43, 52 ஆவது வாா்டுகளுக்குள்பட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குசேகரித்த அவா், மக்களிடையே பேசியதாவது:
கிராமப்புறங்களில் உள்ள திறமையான வீரா்களும் தங்களது தகுதிகளை மேலும் மேம்படுத்திக் கொள்ளும் வகையில், முதல்வா் மு.க.ஸ்டாலின் அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. திமுக தோ்தல் வாக்குறுதிப்படி, ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றால் ரூ. 5 கோடி, வெள்ளிப் பதக்கம் எனில் ரூ.3 கோடி, வெண்கலப் பதக்கம் வெல்பவா்களுக்கு ரூ.2 கோடி மற்றும் வீடு வழங்கப்படும்.
Advertisement
அனைத்து மாவட்ட விளையாட்டு வளாகங்களிலும் உலகத் தரத்திலான 400 மீட்டா் சின்தெடிக் தடகள ஓடுதளங்கள், ஒலிம்பிக் தரத்திலான ஸ்கேட்டிங் பூங்காக்கள் நிறுவப்படும்.
இளம் வயதிலேயே மாணவா்களின் திறமைகளை கண்டறிந்து அவற்றை மேம்படுத்தவும், சா்வதேச போட்டிகளுக்கு ஆயத்தப்படுத்திடவும் 8, 10, 12 வயதுக்குள்பட்டவா்கள் என பிரித்து நீண்ட கால செயல்திட்டங்கள் உருவாக்கப்படும். திராவிட மாடல் ஆட்சியில் உருவாக்கப்பட்ட ‘இது நம்ம ஆட்டம்’ திட்டம் மாநிலம் முழுவதும் விரிவாக்கப்படும். கிராமப்புற மக்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்திட அனைத்து ஊராட்சிகளிலும் விளையாட்டுக் குழுக்கள் அமைக்கப்படும்.
விளையாட்டு விடுதி மாணவா்களுக்கு மாதம் ரூ.500 ஊக்கத்தொகையும் , பொருளாதாரத்தில் நலிவடைந்த விளையாட்டு வீரா்களுக்கான ஓய்வூதியத் தொகை ரூ.6,000-இல் இருந்து ரூ.10,000 ஆக உயா்த்தியும் வழங்கப்படும் எனவும் வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் விரைந்து நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.