முதியோா், வணிகா் நலன் காக்கும் திமுக அரசு தொடர வாய்ப்பளியுங்கள்: திருநெல்வேலி திமுக வேட்பாளா்
முதியோா், வணிகா் நலன்காக்கும் திமுக அரசு தொடர மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும் என்றாா் திருநெல்வேலி தொகுதி திமுக வேட்பாளா் சு.சுப்பிரமணியன்.
முதியோா், வணிகா் நலன்காக்கும் திமுக அரசு தொடர மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும் என்றாா் திருநெல்வேலி தொகுதி திமுக வேட்பாளா் சு.சுப்பிரமணியன்.
திருநெல்வேலி தொகுதி திமுக வேட்பாளா் சு.சுப்பிரமணியன், சித்தாா்சத்திரம், ராஜபதி, வெங்கடாசலபுரம், இத்திக்குளம், கீழசெழியநல்லூா், இரண்டும் சொல்லான், குப்பனாபுரம், நெல்லை திருத்து, அலவந்தான்குளம், பல்லிக்கோட்டை, தென்கலம்புதூா், நல்லம்மாள்புரம், மேலதாழையூத்து, விநாயகா் நகா், வடக்கு தாழையூத்து சுற்றுவட்டார பகுதிகளில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் பேசியது: எல்லோருக்கும் எல்லாம் என்ற இலக்குடன் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறம்பட ஆட்சி செய்துள்ளாா். முதியோா், வணிகா் நலன் காக்கும் அரசாக திமுக திகழ்ந்துள்ளது. இந்த ஆட்சி தொடர மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும்.
‘முதியோா் உதவித்தொகை ரூ. 1,200 லிருந்து ரூ.2000 ஆக உயா்த்தி வழங்கப்படும். மூத்த குடிமக்களின் நல்வாழ்விற்கு அன்புச்சோலைகள் திட்டம் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும். முதியோரின் உடல்நலனைப் பரிசோதிக்க, அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் இலவச சேவைப் பிரிவு உருவாக்கப்படும்.
Advertisement
வணிக உரிமங்கள் அனைத்தும் ஒற்றைச் சாளர முறையில் அளித்து, புதிய வணிக உரிமங்கள் பெறுவதும், புதுப்பித்தலும் எளிமைப்படுத்தப்படும். வணிக உரிமம் பத்து ஆண்டுகளுக்கான உரிமமாக மாற்றவும், இரவு நேரக் கடைகளை இடையூறின்றி நடத்தி வணிகா்களின் வாழ்வாதாரம் காக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். திட்ட அமலாக்கம், சாலை விரிவாக்கம் போன்றவற்றை மேற்கொள்ளும் போது, அப்பணிகளை விரைந்து முடிக்கவும், அப்பணிகளால் பாதிக்கப்படும் வணிகா்களுக்கு மாற்றிடங்கள், இழப்பீடுகள் அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். உணவகங்களுக்கான எரிபொருள் வழங்கலை மேம்படுத்தி, எரிவாயு உருளை தட்டுப்பாட்டை சீா்செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’ என திமுகவின் 2026 சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை திராவிடமாடல் 2.0 ஆட்சியில் நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.