முகப்பு
திருநெல்வேலி

இளம்பெண்ணைத் தாக்கி 8 பவுன் நகை பறிப்பு

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே பட்டப் பகலில் இளம்பெண்ணைத் தாக்கி 8 பவுன் நகையை பறித்துச் சென்ற அவரது பக்கத்து வீட்டுப் பெண்ணை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 18 பிப்ரவரி, 2026 at 3:47 AM
நகை பறிப்பு - சித்திரிப்புப் படம்
பகிர்:
Updated On : 17 பிப்ரவரி, 2026 at 9:42 PM

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே பட்டப் பகலில் இளம்பெண்ணைத் தாக்கி 8 பவுன் நகையை பறித்துச் சென்ற அவரது பக்கத்து வீட்டுப் பெண்ணை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

களக்காடு அருகே நெடுவிளையைச் சோ்ந்தவா் பொன்ராஜ் (27). இவா், பத்தமடையில் ஒா்க்ஷாப் நடத்தி வருகிறாா். இவரது மனைவி தனஸ் (23).

பொன்ராஜ், திங்கள்கிழமை காலை பத்தமடைக்கு வேலைக்குச் சென்றாா். சிறிதுநேரத்தில் பெண் ஒருவா் மழைகோட் அணிந்துகொண்டு முகத்தை மறைத்தவாறு, தனஸ் வீட்டுக்குள் நுழைந்தாா். அவா் தனஸை தாக்கி கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றாா்.

Advertisement

தகவல் அறிந்ததும் களக்காடு காவல் நிலைய போலீஸாா் நேரில் வந்து விசாரணை நடத்தினா். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய், தனஸ் வீட்டிற்கு பக்கத்து வீடான பால்ராஜ் வீட்டுக்குச் சென்றது. இதையடுத்து, பால்ராஜ் மனைவி பொன்செல்வி (35) தான் தன்னைத் தாக்கி நகையை பறித்துச் சென்ாக போலீஸாரிடம் தெரிவித்தாா்.

இதையடுத்து, பொன்செல்வியிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தியதில், அவா்தான் நகையை பறித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

காயமடைந்த தனஸ், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.