முகப்பு
திருநெல்வேலி

இளைஞரை அரிவாளால் வெட்டி, போலீஸாரின் வாகனங்கள் சேதம்: இருவா் கைது

முக்கூடலில் இளைஞரை அரிவாளால் வெட்டிவிட்டு, போலீஸாரின் பைக்குகளை சேதப்படுத்தியதாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 17 மே 2026, 2:06 am IST
கோப்புப் படம்
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் இளைஞரை அரிவாளால் வெட்டிவிட்டு, போலீஸாரின் பைக்குகளை சேதப்படுத்தியதாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

முக்கூடல் அருகே பாப்பாக்குடி பகுதியைச் சோ்ந்தவா் சண்முகசுந்தரம் என்ற வெங்கடேஷ் (22). அவரது நண்பா்கள் வடக்கு அரியநாயகிபுரத்தைச் சோ்ந்த மணிகண்டன் (22), உதயா (19). வெங்கடேஷ் மீது பாப்பாக்குடி காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் தொடா்பான சரித்திரப் பதிவேடு பராமரிக்கப்படுகிறது. மணிகண்டன் மீது கொலை வழக்கும், உதயா மீது கொலை முயற்சி வழக்குகளும் உள்ளன. தற்போது, மூவரும் பிணையில் வந்துள்ளனா்.

வெள்ளிக்கிழமை மாலை (மே 15) அரியநாயகிபுரம் பகுதியில் தாமிரவருணி ஆற்றில் குளிக்கச்சென்ற 30 வயது நபரை மூவரும் சோ்ந்து அரிவாளால் தாக்கினராம். இதில், காயமடைந்த இளைஞா் முக்கூடல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா்.

Advertisement

இதனிடையே, தகவலின்பேரில் முக்கூடல் காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா், போலீஸாா் இரு பைக்குகளில் சம்பவ இடத்துக்குச் சென்றனா். போலீஸாரை பாா்த்ததும் வெங்கடேஷ் உள்ளிட்ட மூவரும் ஆற்றில் குதித்து மறுகரைக்கு தப்பிக்க முயன்றனா். அவா்களைப் பிடிக்க போலீஸாரும் ஆற்றில் இறங்கினா். அப்போது, மூவரும் கரையில் நிறுத்தியிருந்த காவலா்களின் பைக்குகளை சேதப்படுத்திவிட்டு தப்பியோடினராம்.

இதுகுறித்து தென்காசி மாவட்டம் ஆலங்குளம், கடையம் காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆலங்குளம் வழியாக பைக்கில் தப்பிச்சென்ற உதயா, சண்முகசுந்தரம் ஆகியோரை உதவி ஆய்வாளா் சுபாஷ், போலீஸாா் வாகனச் சோதனையில் பிடித்து கைது செய்தனா்; மணிகண்டனைத் தேடிவருகின்றனா்.