சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி, 5 ஆயிரம் கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி திங்கள்கிழமை இரவு கோவில்பட்டிக்கு வந்தார்.
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஹன்மந்து மகன் பி.டெக். பட்டதாரி ரவிகிரன் (29). இவர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு, பிளாஸ்டிக் பைகளை தவிர்த்தல், மரம் நடுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இம்மாதம் 6ஆம் தேதி கன்னியாகுமரியில் தனது பயணத்தை தொடங்கினார். சுமார் 5 ஆயிரம் கி.மீ. கடந்து 100 தினங்களில் காஷ்மீர் சென்றடைய உள்ளதாகவும், தினமும் 90 கி.மீ. தொலைவு சென்று, செல்லும் வழியில் ஏதேனும் ஒரு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர், மாணவிகளை சந்தித்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் என்பன உள்ளிட்ட கொள்கைகளை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தோடு தனது பயணத்தை தொடங்கியுள்ளதாகவும், இக்கொள்கைகளை வலியுறுத்தி குறும்படத்தை ஒவ்வொரு இடங்களிலும் வெளியிட்டு, பயணத்தில் ஈடுபட்டுள்ளேன் என்றார்.
திங்கள்கிழமை இரவு கோவில்பட்டி வந்த இவர், செவ்வாய்க்கிழமை காலை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளை சந்தித்து, சுற்றுச்சூழலை வலியுறுத்தி பேசினார்.
பின்னர், பள்ளித் தலைமையாசிரியை கஸ்தூரி தலைமையில், தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளர் பாலகணேசன், பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்துமுருகன் ஆகியோர் முன்னிலையில், ரவிகிரன் உறுதிமொழி வாசிக்க, அதனை மாணவிகள் ஏற்றுக் கொண்டனர். பின்னர் தனது பயணத்தை கோவில்பட்டியிலிருந்து தொடங்கினார்.
நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.