தூத்துக்குடி மாவட்ட குடிநீர் தேவைக்காக பாபநாசம் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ்.
இதுகுறித்து திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:
தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கத்துக்கு 600 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதில், 366 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு விமான நிலைய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 234 ஏக்கர் நிலம் விரைவில் கையகப்படுத்தப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தின் குடிநீர் தேவைக்காக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கப்பட்டதின் அடிப்படையில் பாபநாசம் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தின் குடிநீர் பிரச்னை ஓரளவு தீரும் என்றார் அவர்.
தொடர்ந்து, தூத்துக்குடி திரேஸ்புரம், புன்னக்காயல், சிங்கித்துறை ஆகிய பகுதிகளில் கடலில் மூழ்கி இறந்த 3 நபர்களின் குடும்பத்தினர்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ. 3 லட்சத்துக்கான காசோலையை பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆட்சியர் என். வெங்கடேஷ் வழங்கினார்.
மேலும், மின் விபத்தில் இறந்த கேம்ப்-1 பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் காசோலையையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரியும் போது இறந்த பணியாளர்கள் 2 பேருக்கு இறப்புக்கால நிவாரணத் தொகை தலா ரூ. 25 ஆயிரம் வீதம் ரூ.50 ஆயிரத்துக்கான காசோலைகளையும், கருணை அடிப்பையில் நான்கு பேருக்கு சத்துணவு அமைப்பாளர் பணிக்கான ஆணையையும் ஆட்சியர் வழங்கினார்.