தூத்துக்குடியில் திங்கள்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் மீனவர் உயிரிழந்தார்.
தூத்துக்குடி இனிகோ நகரைச் சேர்ந்தவர் போஸ்கோ மகன் கௌதம் (24). புதியம்புத்தூர் நயினார்குளம், மேலத்தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி மகன் நந்தகுமார் (18). மீனவர்களான இவர்கள், திங்கள்கிழமை காலை தனித்தனியே தங்களது மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடி கடற்கரை சாலையில் மீன்பிடி துறைமுகம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது, தூத்துக்குடி அனல் மின்நிலைய கேம்ப்-2 குடியிருப்பு பகுதியில் இருந்து மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி நோக்கிச் சென்ற அனல் மின்நிலையப் பேருந்து இந்த 2 மோட்டார் சைக்கிள்கள் மீதும் மோதியது.
இதில், மீனவர் கௌதம் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த நந்தகுமார் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து தென்பாகம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.