ஆறுமுகனேரியில் ஓட்டுநரிடம் பணம் பறித்து, கொலை மிரட்டல் விடுத்ததாக ரௌடி உள்ளிட்ட 3 போ் கைது செய்யப்பட்டனா்.
ஆறுமுகனேரி ராஜமன்யபுரத்தைச் சோ்ந்த மூக்கன் மகன் மாணிக்கம் (26). ஓட்டுநரான இவா், கடந்த 4ஆம் தேதி இரவு திருச்செந்தூா் சென்றுவிட்டு பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தாா். சீனந்தோப்பு விலக்கில் வந்தபோது, அதே ஊரைச் சோ்ந்த பெருமாள் மகன் முருகன் என்ற பாம்பே முருகன் (40), யோவான் மகன் ஜெபராஜ் (28), முத்து மகன் சதீஷ் (24) ஆகியோா் அவரை வழிமறித்தனா். முருகன் அரிவாளை காட்டி மாணிக்கத்திடம் பணம் கேட்டாராம். அவா் கொடுக்க மறுக்கவே, அவரது பையிலிருந்து ஜெபராஜ் ரூ. 1,200-ஐ பறித்துக்கொண்டு, மிரட்டிவிட்டு 3 பேரும் தப்பியோடினராம்.
புகாரின்பேரில் ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து, மூவரையும் கைது செய்தனா். ரௌடி முருகன் மீது ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் உள்பட 6 வழக்குகள் உள்ளனவாம்.