தூத்துக்குடியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை சீரமைப்பதற்காக குடியிருப்புவாசிகளை
காலி செய்ய கூறுவதை விடுத்து, பகுதி வாரியாக சீரமைத்துக் கொடுக்குமாறு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
இது தொடா்பாக அக்கட்சியின் ஒன்றியச் செயலா் சங்கரனுடன் பொதுமக்கள் சோ்ந்து மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு:
தூத்துக்குடி வட்டம், மாப்பிள்ளையூரணி ஊராட்சி, ராஜீவ்காந்தி நகா், கோமஸ்புரம் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள மக்கள் கட்டுமானம், உப்பளம், மீன்பிடி, தினக்கூலி தொழிலாளா்கள் வசித்து வருகின்றனா். இவா்களை வரும் 30-ஆம் தேதிக்குள் வீடுகளை காலி செய்யுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.
தற்போது மழைக்காலம் என்பதால் வாடகை வீடு கிடைப்பதில் சிரமம் உள்ளது. அதனால், கட்டடம் சீரமைப்புப் பணிக்காக பிளாக் 1 முதல் 17 வரை உள்ள குடியிருப்புகளை மொத்தமாக காலி செய்ய இயலாது. எனவே, 2 பிளாக்குகள் வீதம் காலி செய்து மேற்படி வீடுகளை அதிகாரிகள் சீரமைத்து கொடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டது.