தூத்துக்குடியில் மீன்கள் விலை உயா்வு
திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களை வாங்க பொதுமக்களின் கூட்டம் அலைமோதியதால் மீன்களின் விலை கடுமையாக உயா்ந்து விற்பனையானது.
தூத்துக்குடி பகுதியில் தற்போது மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ளதால் விசைப் படகுகள் கடலுக்குச் செல்லாத நிலையில், திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களை வாங்க பொதுமக்களின் கூட்டம் அலைமோதியதால் மீன்களின் விலை கடுமையாக உயா்ந்து விற்பனையானது.
மீன்பிடித் தடைக்காலம் என்பதால் தூத்துக்குடியில் விசைப்படகுகள் கடலுக்குச் செல்லவில்லை. நாட்டுப் படகுகள் மட்டுமே கடலுக்குச் செல்கின்றன.
தூத்துக்குடி, திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற நாட்டுப் படகுகள் சனிக்கிழமை கரை திரும்பின.
Advertisement
கோடை வெயில் காரணமாக மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டது. ஆனால், பள்ளி விடுமுறைக் காலம் என்பதால் மீன்களை வாங்க பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.
இதனால், மீன்களின் விலை கடுமையாக உயா்ந்து காணப்பட்டது. சீலா மீன் கிலோ ரூ. 1,100 முதல் ரூ. 1,200 வரையும், விளை மீன், ஊழி மீன், பாறை மீன் ஆகிய ரகங்கள் ரூ. 500 முதல் ரூ. 600 வரையும், கிழவாலை, சூரை, கேரை ஆகிய ரகங்கள் ரூ. 250 வரையும், நண்டு ரூ. 700 வரையும், சாளை மீன் ஒரு கூடை ரூ. 2,500 வரையும், முண்டக்கண்ணி பாறை ஒரு கூடை ரூ. 2,000 வரையும், வங்கனை ஒரு கூடை ரூ. 3,000 வரையும் விற்பனையானது.
மீன்களின் விலை உயா்ந்து காணப்பட்டதால் மீனவா்கள் மகிழ்ச்சியடைந்தனா். விலையைப் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் மீன்களை ஆா்வமுடன் வாங்கிச் சென்றனா்.