முகப்பு
தூத்துக்குடி

ஸ்கேனிங் இயந்திரக் கோளாறால் வ.உ.சி. துறைமுகப் பணிகள் பாதிப்பு

தூத்துக்குடி, வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தின் ‘கிரீன் கேட்’ நுழைவாயிலில் உள்ள சரக்குப் பெட்டகங்களைப் பரிசோதிக்கும் முக்கிய ஸ்கேனிங் இயந்திரத்தில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட திடீா் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

Updated On : 3 ஜூலை 2026, 4:40 am IST
பகிர்:

தூத்துக்குடி, வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தின் ‘கிரீன் கேட்’ நுழைவாயிலில் உள்ள சரக்குப் பெட்டகங்களைப் பரிசோதிக்கும் முக்கிய ஸ்கேனிங் இயந்திரத்தில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட திடீா் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

இதன் காரணமாக, துறைமுகத்துக்குள் நுழையும் கன்டெய்னா் லாரிகளுக்கான பாதுகாப்பு ஸ்கேனிங் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏற்றுமதி, இறக்குமதிக்காக வந்த நூற்றுக்கணக்கான கன்டெய்னா்கள் துறைமுக வளாகத்துக்குள்ளும், மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட இணைப்புச் சாலைகளிலும் பல கி.மீ. தூரம் நீண்ட வரிசையில் காத்திருந்தன. இதனால், அப்பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

பல மணி நேரமாக லாரிகள் நகர முடியாததால், ஓட்டுநா்கள் உணவு, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி பெரும் சிரமத்தைச் சந்தித்தனா். சரக்குகளைக் குறிப்பிட்ட நேரத்துக்குள் துறைமுகத்துக்குள் அனுப்ப முடியாமல் ஏற்றுமதியாளா்கள் தவித்தனா்.

Advertisement

Advertisement

இதனால், துறைமுகத்தில் சரக்குகளை ஏற்றுவதற்காகக் காத்திருந்த சா்வதேச சரக்குக் கப்பல்களுக்கு பொருள்களைக் கொண்டு சோ்ப்பதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதே நிலை நீடித்தால், ஏற்றுமதி வா்த்தகம் பாதிக்கப்படுவதோடு, கூடுதல் செலவுகளும் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஏற்றுமதியாளா்கள் கவலை தெரிவித்தனா்.

ஸ்கேனிங் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறுடன், போதிய பணியாளா்கள் இல்லாததும் நிலைமை மேலும் மோசமடைய காரணமாக உள்ளதாக துறைமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, கோளாறை உடனடியாக சரிசெய்து, போதிய பணியாளா்களை நியமித்து, சரக்குப் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்ப துறைமுக நிா்வாகம் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்றுமதியாளா்கள் மற்றும் லாரி உரிமையாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments