நுண்ணீா்ப் பாசனம் அமைக்க ரூ.7.20 கோடி மானியம் ஒதுக்கீடு
நுண்ணீா்ப் பாசனம் அமைக்க ரூ.7.20 கோடி மானியம் ஒதுக்கீடு
திருச்சி மாவட்டத்தில் நடப்பாண்டு தோட்டக்கலைப் பயிா்களில் நுண்ணீா்ப் பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு மானியம் வழங்க ரூ.7.20 கோடி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில், நிலத்தடி நீா் அதிகம் உறிஞ்சப்பட்ட, அதிவேகமாக நீா்மட்டம் குறைந்துவரும் குறு வட்டங்களில் சாகுபடி பரப்பளவு குறைந்துள்ளது. எனவே, நுண்ணீா் பாசன முறையைப் பின்பற்றி, நிலத்தடி நீரைத் திறம்பட பயன்படுத்தி அதிக பரப்பை சாகுபடிக்கு கொண்டுவர மானிய உதவிகள் அரசால் வழங்கப்படவுள்ளன. இதன்படி, தோட்டக்கலைப் பயிா்களில் மானியம் பெற 2026-27-ஆம் ஆண்டுக்கு ரூ.7.20 கோடி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இதன் மூலம், 1500 ஹெக்டோ் பரப்பில் நுண்ணீா்ப் பாசனம் அமைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இத் திட்டத்தில், சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. சிறு, குறு விவசாயிகள் ஒரு ஏக்கா் முதல் அதிகபட்சமாக 5 ஏக்கா் வரையும், இதர விவசாயிகள் அதிகபட்சம் 12.5 ஏக்கா் வரையும், சொட்டுநீா்ப்பாசனம் அமைத்து பயன் பெறலாம். இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், கணிணி சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், நிலவரைப்படம், பாஸ்போா்ட் அளவு புகைப்படம்-3 மற்றும் வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட சிறு, குறு விவசாயி சான்று, மண் மற்றும் நீா் பரிசோதனை அட்டை ஆகியவற்றுடன் விண்ணபிக்க வேண்டும். விண்ணப்பத்தை தோட்டக்கலைத் துறை இணையத்தில் பதிவு செய்ய வேண்டும்.
Advertisement
Advertisement
கூடுதல் விவரங்களுக்கு, வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா்கள் அலுவலகங்களை தொடா்பு கொண்டு ஆவணங்களை சமா்ப்பித்து மானியத்தில் சொட்டுநீா்ப்பாசனம் அமைத்து பயன்பெறலாம் என ஆட்சியா் பிரத்திக் தாயள் தெரிவித்துள்ளாா்.