பயணம் தாமதமாகும்! திருச்சியில் புறவழிச் சாலை காவிரிப் பாலம் மூடப்பட்டது!
சென்னை புறவழிச்சாலையில் உள்ள காவிரி பாலம் பராமரிப்பு பணிக்காக வியாழக்கிழமை இரவு அடைக்கப்பட்டு போக்குவரத்து மாற்றிவிடப்பட்டுள்ளதைப் பற்றி...
சென்னை புறவழிச்சாலையில் உள்ள காவிரி பாலம் பராமரிப்பு பணிக்காக வியாழக்கிழமை இரவு அடைக்கப்பட்டு போக்குவரத்து மாற்றிவிடப்பட்டுள்ளது.
திருச்சி - சென்னை புறவழிச்சாலையில் சஞ்சீவி நகர் - திருவானைக்காவல் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே கடந்த 1963-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பாலத்தில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்தப் பாலம் வியாழக்கிழமை (ஜூன் 25) முதல் அடைக்கப்பட்டு போக்குவரத்து மாற்றப்படும் என்று நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஒருநாள் முன்னதாக புதன்கிழமை (ஜூன் 24) அறிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதைத்தொடர்ந்து வியாழக்கிழமை காலைமுதல் தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், மாநகரப் போக்குவரத்து காவலர்கள் காவிரி பாலத்தை அடைத்து போக்குவரத்தை மாற்றிவிடும் பணியை மேற்கொண்டனர்.
காலையில் பரிசோதனை முறையில் மேற்கொள்ளப்பட்டு இரவு 7.30 மணிக்கு பாலம் முற்றிலும் அடைக்கப்பட்டது. இதையடுத்து, திருச்சி - சென்னை வழியில் செல்லும் வாகனங்கள் சஞ்சீவி நகர் சந்திப்பு முதல் கொண்டையம்பேட்டை பாலம் வரை சென்னை - திருச்சி சாலையில் எதிர்த்திசையில் சென்று கொண்டையம்பேட்டை பாலம் அருகே மீண்டும் திருச்சி - சென்னை புறவழிச் சாலையில் செல்லும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எதிர்த்திசையில் சென்னை - திருச்சி மார்க்கத்தில் வரும் வாகனங்கள் கொண்டையம்பேட்டை, சர்க்கார்பாளையம் அணுகுசாலையில் வந்து சஞ்சீவி நகர் சந்திப்பில் இருந்து வழக்கமான சாலையில் செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில், காவிரி ஆற்றுப்பாலத்தில் மட்டும் இரண்டு திசையிலும் வாகனங்கள் செல்லும் வகையில் பாலத்தின் மையத்தில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
காவிரி பாலத்தில் மட்டுமே இருவழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளதால் வாகனங்கள் சற்று ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மற்றபடி பெரிய அளவில் வாகன நெரிசல் இல்லை என போக்குவரத்து காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
The Cauvery Bridge on the Chennai bypass has been closed for maintenance work since Thursday night, and traffic has been diverted.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.