மேட்டூா் திறப்புக்கு முன் காவிரி புதிய பால பிரதானப் பணிகளை முடிக்க திட்டம்!
மேட்டூா் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பதற்கு முன்பாக காவிரி புதிய பாலம் கட்டுமானத்தின் முக்கியப் பணிகளை விரைந்து முடிக்க திட்டமிட்டு நடவடிக்கை...
திருச்சி: நிகழாண்டு மேட்டூா் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பதற்கு முன்பாக காவிரி புதிய பாலம் கட்டுமானத்தின் முக்கியப் பணிகளை விரைந்து முடிக்க திட்டமிட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கத்தையும் திருச்சி மாநகரையும் பிரிக்கும் வகையில் செல்லும் காவிரியாற்றின் குறுக்கே இணைப்புப் பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதன்படி கடந்த 1976-ஆம் ஆண்டு காவிரியின் குறுக்கே மாம்பழச் சாலையையும், திருச்சி சிந்தாமணி பகுதியையும் இணைக்கும் வகையில் பாலம் கட்டப்பட்டது.
இந்த பாலம் கட்டப்பட்டு சுமாா் 50 ஆண் டுகள் நிறைவடைந்துவிட்டதால் அடிக்கடி பாலத்தில் பழுதுபாா்க்கும் பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதன்காரணமாக பாலம் அவ்வப்போது மூடப்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, தற்போதுள்ள பாலத்தின் அருகிலேயே புதிய பாலம் கட்டுவதற்கு மாநில நெடுஞ்சாலைத் துறை சாா்பில் திட்டம் தயாரிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு ரூ.106 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டுமான பணியானது கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கியது. 545.65 மீட்டா் நீளம், நடைபாதையுடன் சோ்த்து 17.75 மீட்டா் அகலத்தில் நான்கு வழிச்சாலையாக இந்த பாலம் கட்டுமான பணியானது நடைபெற்று வருகிறது. மொத்தம் 17 கண்களுடன் இந்த பாலம் கட்டப்பட்டு வருகிறது.
இதில், 15 கண்கள் கட்டும் பணி முடிந்துவிட்டதால் அவை ஆற்றின் தரைப்பகுதியில் இருந்து மேல் எழும்பி விட்டன. சிந்தாமணி பகுதியில் மட்டும் இன்னும் 2 கண்கள் அமைக்கப்படவேண்டியது இருப்பதால் அந்த பகுதியில் மட்டும் தற்போது பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து நெடுஞ்சாலை துறை வட்டாரத்தினா் கூறுகையில், காவிரி புதிய பாலம் கட்டுமான பணியானது இதுவரை 60 சதவீதத்துக்கு மேல் நிறைவு பெற்றுவிட்டது. மேட்டூா் அணையிலிருந்து ஜூன் மாதம் 12-ஆம் தேதி தண்ணீா் திறந்து விடப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதற்கு முன்பாக நீரோட்டத்தினால் பணிகள் பாதிக்கப்படாத அளவுக்கு துரிதமாக பணிகள் நடைபெற்று வருகின்றன.
செப்டம்பா் மாதத்துக்குள் பாலம் கட்டுமான பணிகளை முழுவதுமாக முடிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. பணிகள் முடிந்தவுடன் விரைவாக பொது மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றனா்.