அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு குடிநீர் கேட்டு கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உடையார்பாளையம் பேரூராட்சி 4 ஆவது வார்டில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பேரூராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இந்த வார்டு மக்களுக்கு முழுமையாக தண்ணீர் கிடைக்காததால், 3 ஆவது வார்டிலிருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், குடிநீர் போதுமான அளவு கிடைக்கவில்லை. எனவே, சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பேரூராட்சியில் மக்கள் மனுகொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கோரி அப்பகுதி மக்கள் உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சென்ற உடையார்பாளையம் போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் திருச்சி-சிதம்பரம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.