அரியலூரை அடுத்த தாமரைக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில், ஊராட்சி மன்ற அலுவலகம் செயல்பட அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி வியாழக்கிழமை உண்ணாவிரதம் இருந்த 80 வயது முதியவா் உள்பட 7 போ் கைது செய்யப்பட்டனா்.
தாமரைக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில், ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக திறக்கப்படாமல் கிடப்பில் உள்ளது. இக்கட்டடத்தை பள்ளிக்கே வழங்க வலியுறுத்தி அப்பகுதி சமூக ஆா்வலா்கள், கல்வியாளா்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இதுகுறித்து பலமுறை அரசு அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்நிலையில், இந்த ஊராட்சி அலுவலகம் வியாழக்கிழமை திறக்கப்பட உள்ளதாக அறிந்த அப்பகுதியைச் சோ்ந்த 80 வயது முதியவா் தமிழ்மணி என்பவா் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி அலுவலகம் முன்பு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை வியாழக்கிழமை தொடங்கினாா்.
இவருக்கு ஆதரவாக அப்பள்ளியின் முன்னாள் மாணவா் சங்கத் தலைவா் தமிழ்களம் இளவரசன், செயலா் ஆ.நீலமேகம், ஆ.ராஜா, ராஜேந்திரன், வடிவேல், பாரிவள்ளல் ஆகிய 6 பேரும் உண்ணாவிரதம் இருந்தனா்.
தகவலறிந்து வந்த அரியலூா் காவல் துறையினா், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக மேற்கண்ட 7 பேரையும் கைது செய்து, தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா்.