தமிழக வாகனங்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம்
கர்நாடகத்தில் தமிழக வாகனங்கள் தாக்கப்படும் செயலுக்கு சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கர்நாடகத்தில் தமிழக வாகனங்கள் தாக்கப்படும் செயலுக்கு சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கரூரில் அனைத்திந்திய சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் நலச்சங்க கரூர் மாவட்ட கலந்தாய்வு மற்றும் ஒருங்கிணைப்புக் கூட்டம் தாந்தோணிமலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆர்.பி. மணிவண்ணன், கே. சுரேஷ்குமார், வி.ஆர். மதுசூதனன், பி. செல்வராஜ், பி. சரவணன் ஆகியோர் தலைமை வகித்தனர். சங்கத்தின் மாநிலத் தலைவர் சி. ராமஜெயம் பேசியது:
தமிழக அரசு அனைத்து சுற்றுலா வாகனங்களுக்கும் சீட் பெர்மிட் கொடுக்க வேண்டும். எங்களது வாகன ஓட்டிகளுக்கும், மினி பேருந்து, ஓட்டுநர்களுக்கும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பேட்ஜ் போடும்போதே தொழிலாளர் நலவாரியத்தில் சேரவும், இலவச இன்சூரன்சும் வழங்க வேண்டும்.
காவிரி பிரச்னையின்போது கர்நாடகத்திற்குச் செல்லும் தமிழக வாகனங்களை அம்மாநிலத்தவர்கள் தாக்குகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. வாகன ஓட்டிகள் உங்களை நம்பி வருகிறார்கள், உங்கள் மாநிலத்துக்கு வருகிறார்கள்.
தமிழகத்துக்கு வரும் கர்நாடக வாகனங்களுக்கு எவ்வாறு தமிழக அரசு பாதுகாப்பு வழங்குகிறதோ அதேபோல கர்நாடக அரசும் தமிழக வாகனங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அவசியம் என்றார்.
கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் கே. செல்லமுத்து, பொதுச் செயலர் ஆர்.எல். கார்த்திகேயன், இணைச் செயலர் பாலாஜி, துணைச் செயலர் பாலகிருஷ்ணன், கரூர் ஒருங்கிணைப்பாளர் கே. செல்லமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர். கரூர் பிரபாகரன் நன்றி கூறினார்.