அரவக்குறிச்சியில் வரும் 27ஆம் தேதி சிறுபான்மையினருக்கு கடன் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கல்வி கடன், கறவை மாடு கடனுதவி, ஆட்டோ கடன் ஆகிய திட்டங்களுக்கு கடன் வழங்கப்படுகிறது.
இந்த சிறப்பு முகாம் வரும் 27ஆம் தேதி அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
தனிநபர் கடனில் ஆண்டிற்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும், சுய உதவிக்குழு திட்டத்தில் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீதம் என்ற வட்டி விகிதங்களிலும் கடன் வழங்கப்படுகிறது.
சுயஉதவிக் குழு கடன் நபர் ஒருவருக்கு ரூ.50,000 ஆண்டிற்கு 7சதவீத வட்டி விகிதத்திலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை, தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு அதிகபட்சமாக தனிநபர் கடன் திட்டத்தில் ரூ.20 லட்சம் வரை 3 சதவீத வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படும்.
முகாமில், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், பார்சி உள்ளிட்ட சிறுபான்மையின மக்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.