கரூரில் வீடு புகுந்து திருடிய இருவரை கையும்களவுமாக பிடித்த பொதுமக்கள் அவர்களுக்கு அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர்.
கரூர் நகராட்சிக்குட்பட்ட கருப்பகவுண்டன்புதூர் அசோக் நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன் (45). இவர் அதேபகுதியில் இருசக்கர வாகன பழுதுநீக்கும் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கரூரில் உள்ள தனியார் ஜவுளி ஏற்றுமதி நிறுவன ஊழியர். செவ்வாய்க்கிழமை காலை இருவரும் பணிக்குச் சென்று விட்டநிலையில் பிற்பகல் 12 மணியளவில் வீட்டின் பூட்டை உடைத்த 4 இளைஞர்கள் உள்ளே புகுந்து 4 பவுன் செயின் மற்றும் பணம் ரூ.5,000 ஆகியவற்றை திருடினர்.
பின்னர் பக்கத்து வீட்டின் கதவையும் உடைக்க முயன்றுள்ளனர். அப்போது சத்தம் கேட்டு அவ்வழியாகச் சென்றவர்கள், அவர்களை மடக்கி பிடிக்க முயன்றனர். இதில் 2 பேர் மட்டும் பைக்கில் ஏறி தப்பினர். இருவரைப் பிடித்த பொதுமக்கள் அடி கொடுத்து தாந்தோணிமலை போலீஸில் அவர்களை ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர்கள் இருவரும் தர்ம்புரி மாவட்டம் வெண்ணாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முகமதுயூசுப் மகன்கள் மைதீன் (24), சாதிக்பாட்ஷா(26) எனத் தெரியவந்தது. தப்பிய இளைஞர்கள் குறித்தும் விசாரிக்கிறார்கள்.