தனது பிரசாரத்துக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் அனுமதி தருவதில்லை. பெரிய கட்சிகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கிறார் என அருந்தமிழர் குடியரசுக் கட்சி அரவக்குறிச்சி தொகுதி வேட்பாளர் தலித்பாண்டியன் புகார் மனு அனுப்பியுள்ளார்.
தலைமை தேர்தல் ஆணையருக்கு அருந்தமிழர் குடியரசு கட்சியின் அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தல் வேட்பாளர் தலித் பாண்டியன் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பது:
அரவக்குறிச்சிஇடைத் தேர்தலில் செருப்பு சின்னத்தில் போட்டியிடுகிறேன். நான் பிரசாரத்திற்கு இணையவழியில் அனுமதி கேட்கும்போதெல்லாம் தேர்தல் நடத்தும் அலுவலர் நிராகரிப்பு செய்கிறார். பெரிய கட்சிகளுக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கிறார். வேட்புமனு தாக்கல் செய்த நாளில் இருந்து அதிமுக, திமுக, அமமுக கட்சியைச் சேர்ந்தவர்கள் கிராமப்புறங்களில் உள்ள வாக்காளர்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டுள்ளனர். மேலும் அனைத்து வார்டுகளிலிலும் இந்த மூன்று கட்சியைச் சேர்ந்தவர்கள் அமர்ந்து கொண்டு மற்ற வேட்பாளர்கள் ஊருக்குள் நுழையாதபடி செய்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.