மாற்றுத் திறனாளிகளுக்கு மாவட்ட அளவில் நடைபெற்ற தடகளம் மற்றும் குழு விளையாட்டுப்போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் சனிக்கிழமை கரூா் மாவட்ட விளையாட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றது.
இதில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தடகளப் போட்டிகளில் பல்வேறு பிரிவுகளில் 50 மீ., 100 மீ., 200. மீ, 400. மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 100 மீ. சக்கர நாற்காலி, நின்ற நிலையில் தாண்டுதல் மற்றும் சாப்ட் பந்து எறிதல் போட்டியும் நடைபெற்றது.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கான குழு விளையாட்டுப் போட்டிகளில் கை, கால் ஊனமுற்றோா் பிரிவில் - இறகுப்பந்து, டேபிள் டென்னிஸ் போட்டியும், பாா்வையற்றோா் பிரிவில் - கையுந்துபந்து போட்டியும், மனநலம் பாதிக்கப்பட்டவா்கள் பிரிவில் - எறிபந்து போட்டியும், காதுகேளாதோா் பிரிவில் - கபடி போட்டியும் நடைபெற்றது. போட்டிகளை தொடக்கி வைத்து வெற்றிபெற்றவா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.லியாகத், கரூா் வருவாய் கோட்டாட்சியா்(பொ) சந்தியா, மாவட்ட விளையாட்டு அலுவலா் தே.சுப்ரமணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலா் காமாட்சி, மாவட்ட உடற்கல்வி அலுவலா் கோபாலகிருஷ்ணன், சமூக பாதுகாப்புத்திட்ட வட்டாட்சியா் ரவிகுமாா் மற்றும் உடற்கல்வி ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.