கரூர் மாரியம்மன் கோயில் கம்பம் திருவிழா தொடக்கம்!
கரூர் மாரியம்மன் கோயிலில் நடைபெறும் கம்பம் திருவிழா தொடங்கியது குறித்து...
கரூர் மாரியம்மன் கோயிலின் கம்பம் திருவிழா, கம்பம் நடுதலுடன் இன்று (மே 10) தொடங்கியது.
கரூரில் மாரியம்மன் கோயில் கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் திருவிழா, கம்பம் நடுதலுடன் தொடங்கியது. கரூரின் காவல் தெய்வமாகவும் மழை பொழியும் தெய்வமாகவும் போற்றப்படும் கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா இன்று காலை கம்பம் நடுதலுடன் தொடங்கியது.
முன்னதாக, மூப்பன் வகையறாக்களின் கனவில் தோன்றிய மாரியம்மன் முக்கிளை கம்பம் இருக்கும் இடத்தை தெரிவித்தார். இதை யடுத்து முக்கிளை கம்பம் இருக்கும் இடம் அறியப்பட்டு அவற்றுக்கு சிறப்பு பூஜை சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
Advertisement
பின்னர், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முக்கிளை கம்பம் வெட்டப்பட்டு அதற்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு பாலம்மாள் புரம் விநாயகர் கோயில் கொண்டுவரப்பட்டு இங்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் முக்கிளை கம்பம் பாலம்மாள் புரத்தில் இருந்து மூப்பன் வகையறாக்களால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மாரியம்மன் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, முக்கிளை கம்பம் செதுக்கப்பட்டு அமராவதி ஆற்றில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்ட பின்னர், கோயில் முன் நடப்பட்டது. நீண்ட வரிசையில் பக்தர்கள் கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி வழிபாடு செய்தனர். முக்கிளை கம்பம் நடும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பத்தை ஆற்றுக்கு அனுப்பும் விழா வரும் 27ஆம் தேதி நடைபெறுகிறது. கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழாவை முன்னிட்டு, அன்று உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் முத்துக்குமார் தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.