தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 319 பேருக்கு நாளை பயிற்சி வகுப்புகள்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்காக இலவச பயிற்சி வகுப்புகளில் பங்கேற்பதற்காக சனிக்கிழமை நடைபெற்ற தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற 319 பேருக்கு திங்கள்கிழமை (மே 13) முதல் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்காக இலவச பயிற்சி வகுப்புகளில் பங்கேற்பதற்காக சனிக்கிழமை நடைபெற்ற தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற 319 பேருக்கு திங்கள்கிழமை (மே 13) முதல் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.
பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்காக மாவட்ட நிர்வாகத்தால் அளிக்கப்படும் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள முன்பதிவு செய்த நபர்களுக்கான தகுதித் தேர்வு சனிக்கிழமை நடைபெற்றது.
தேர்வு மையத்தை பார்வையிட்டு ஆட்சியர் மேலும் கூறியது:
Advertisement
Advertisement
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்காக மாவட்ட நிர்வாகத்தால் நடைபெறவுள்ள பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள ஏப். 30 -ம் தேதி முதல் மே 9 -ம் தேதி வரை முன்பதிவு செய்யப்பட்டது. இதில் 1,062 பேர் பதிவு செய்திருந்தனர்.
அதனடிப்படையில் பொதுத்தமிழ், பொது அறிவு ஆகிய பாடங்களில் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வில் 953 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
தகுதித் தேர்வு விடைத்தாள்கள் உடனடியாக மதிப்பீடு செய்யப்பட்டு தேர்வு பெற்ற 319 பேரின் பெயர்கள் பதிவு எண்ணுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பெரம்பலூர் கோட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மைய நூலகம், வட்டாட்சியர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் உள்ள விளம்பரப் பலகையில் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு ஒட்டப்பட்டன.
தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு திங்கள்கிழமை (மே 13) முதல் சிறப்பு பயிற்சி வகுப்புகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளன.
இதுகுறித்து விவரம் அறிந்துகொள்ள 98943-93970, 99430-88022 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றார் ஆட்சியர் தரேஸ் அஹமது.