காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, புதுதில்லியில் உள்ள பிரதமர் வீட்டின் எதிரே தூக்கிட்டு போராட்டம் நடத்தப்படும் என்றார் தேசிய, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பி. அய்யாக்கண்ணு.
பெரம்பலூர் புறநகர்ப் பேருந்து நிலைய வளாகத்தில் பொதுமக்கள், பயணிகளிடம் ஞாயிற்றுக்கிழமை இரவு துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்த அவர் அளித்த பேட்டி:
நஞ்சில்லா உணவு மூலம் மனித குலத்தை மீட்கவும், மரபணு மாற்றப்பட்ட விதைகளைக் கொண்டு விவசாயம் செய்வதைத் தடை செய்யக் கோரியும் கன்னியாகுமரி முதல் கோட்டை வரை நடைப்பயணம் மேற்கொண்டுள்ளோம். கடந்த மார்ச் 1 ஆம் தேதி கன்னியாகுமரியில் விழிப்புணர்வு நடைப்பயணத்தை தொடங்கி, கடந்த 46 நாள்களில் 16 மாவட்டத்தில் 15 லட்சம் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், உச்சநீதிமன்ற உத்தரவின்படி மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, மெரினா கடற்கரையில் 90 நாள்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உச்சநீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டுள்ளது.
மேலும், புது தில்லியில் உள்ள பிரதமர் வீட்டு எதிரே தூக்கிட்டு போராட்டம் நடத்த உள்ளோம் என்றார் அவர்.