இலவச எரிவாயு இணைப்பு வழங்க விழிப்புணர்வு முகாம்
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜானா திட்டத்தின் கீழ், இலவச எரிவாயு இணைப்பு வழங்குவது தொடர்பாக எரிவாயு முகவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜானா திட்டத்தின் கீழ், இலவச எரிவாயு இணைப்பு வழங்குவது தொடர்பாக எரிவாயு முகவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூர் எம்.எம். கேஸ் ஏஜென்சீஸ் உரிமையாளர் கஜேந்திரன் தலைமை வகித்தார். முத்து ரத்னா கேஸ் ஏஜென்சீஸ் உரிமையாளர் எம். பிரபாகரன், அருண் கேஸ் ஏஜென்சீஸ் உரிமையாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன எரிவாயு விற்பனை பிரிவு முதுநிலை மேலாளர் பி. ஜெயசங்கர் பேசியது:
மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத் துறை அமைச்சகம், கோடிக்கணக்கான ஏழைப் பெண்கள் பயன்பெறும் வகையில் பிரதமரின் உஜ்வாலா யோஜனா எனும் புதிய திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு இணைப்பு வழங்க முகவர்கள் விரைந்து செயல்பட வேண்டும். வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள குடும்பங்களுக்கு எவ்வித முன் பணமுமின்றி அளிக்கப்படும் ஒவ்வொரு எரிவாயு இணைப்புக்கும், மத்திய அரசு சார்பில் ரூ. 1, 600 மானியம் அளிக்கப்படுகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் 14 கேஸ் ஏஜென்சீஸ் முகவர்கள் தாங்கள் தத்தெடுத்துள்ள கிராமங்களில் ஏப். 20 முதல் மே 5 வரை விழிப்புணர்வு முகாம் நடத்த வேண்டும். பெண்களுக்கு அதிகாரமளித்து, அவர்களது உடல் நலன் பாதுகாப்பு, வேலைப்பளுவைக் குறைத்தல், சமையல் நேரம் குறைப்பு, சமையல் எரிவாயு வழங்குவதன் மூலம் ஊரக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது குறித்து விளக்க வேண்டும்.
வீடுதோறும் சென்று எரிவாயு இணைப்பு இல்லாத வீடுகளைக் கண்டறிந்து, அந்த குடும்பங்களுக்கு இணைப்பு வழங்க முனைப்புடன் செயல்பட வேண்டும்.
விண்ணப்பதாரரின் முகவரி சான்றாக, புகைப்படத்துடன் கூடிய வங்கிக் கணக்குப் புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், விவசாய வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல்களை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும் என்றார் அவர்.