பெரம்பலூரில் தேவேந்திர குல வேளாளர் இனம் சார்பில், பிரதமருக்கு நன்றி அறிவிப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தேவேந்திர குல இனத்தவரை, தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிடப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அறிவித்தார்.இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடத்தப்பட்ட கூட்டத்துக்கு,
பெரம்பலூர் மக்களவை தொகுதி அமைப்பாளர் லெனின் ராஜா தலைமை வகித்தார். நிர்வாகிகள் மணிவாசகன், கலியபெருமாள், ஐயப்பன், சதீஷ், அருண்பாண்டியன் முன்னிலை வகித்தனர்.
தேவேந்திர தன்னார்வ அறக்கட்டளை நிறுவனர் தங்கராஜ், பாரதிய ஜனதா கட்சி மாநில நிர்வாகி சீனிவாசன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் சி. சந்திரசேகரன் ஆகியோர் மத்திய அரசின் செயல்பாடுகள், செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து விளக்கி பேசினர்.முன்னதாக, சட்டப்பேரவை தொகுதி அமைப்பாளர் ராஜா வரவேற்றார். நிறைவில் துணை அமைப்பாளர் செல்வகுமார் நன்றி கூறினார்.