பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே வெள்ளிக்கிழமை காலை பள்ளி ஆசிரியரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, 10 பவுன் நகைகளைப் பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
குன்னம் அருகிலுள்ள மருதையான்கோயில் பகுதியைச் சேர்ந்தவர் செந்தமிழ்ச்செல்வி (45). ஒதியம் கிராமத்திலுள்ள அரசுத் தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார். வெள்ளிக்கிழமை காலை தனது இரு சக்கர வாகனத்தில் தமிழ்ச்செல்வி பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த அடையாளம் தெரியாத 4 பேர் தமிழ்ச்செல்வியை மிரட்டி, அவர் அணிந்திருந்த 10 பவுன் நகைகளைப் பறித்து தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து குன்னம் காவல் நிலையத்தில் செந்தமிழ்ச்செல்வி புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், நகைபறிப்பில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத4 பேரைத் தேடி வருகின்றனர்.