ஆலத்தூர் வட்டம், செட்டிக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக மக்கள்தொகை தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியர் பெ. நாகமணி தலைமை வகித்தார். ஆலத்தூர் வட்டார மருத்துவ அலுவலர் அ. மகாலெட்சுமி, மக்கள்தொகை பெருக்கத்துக்கான காரணங்கள், அதன் பாதிப்புகள், குழந்தைத் தொழிலாளர் வேலையில் அமர்த்துதல், குழந்தைத் திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசினார். ஆலத்தூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் எம். ராஜேந்திரன், டெங்கு நோய் ஏற்படும் விதம், அதனால் ஏற்படும் பாதிப்புகள், தவிர்க்கும் முறைகள் குறித்தும், பள்ளி உதவித் தலைமையாசிரியர் ர் செ. மணி, தாவரவியல் ஆசிரியர் த. கலியமூர்த்தி ஆகியோர் மக்கள்தொகை பெருக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பேசினர்.
தொடர்ந்து பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றோருக்கு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் பாடாலூர் அருண்குமார், செட்டிக்குளம் பானுப்பிரியா ஆகியோர் பரிசுகளை வழங்கினர். விழா ஏற்பாடுகளை இளையோர் செஞ்சிலுவை சங்க மாவட்ட கன்வீனர் வெ. ராதாகிருஷ்ணன், இடைநிலை உதவித் தலைமையாசிரியை ந. லதா ஆகியோர் செய்திருந்தனர். முன்னதாக,செட்டிக்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் வா. ஆனந்த் வரவேற்றார். நிறைவில் உடற்கல்வி ஆசிரியர் ந. அன்பரசு நன்றி கூறினார்.